முதுகுளத்தூர் ஒன்றியத்தில் பயன்படுத்த முடியாத தனிநபர் கழிப்பறைகள்
முதுகுளத்தூர் ஒன்றியத்தில் கட்டப்பட்டு வரும் தனிநபர் கழிப்பறைகள் பயன்படுத்த முடியாத அளவிற்கு கட்டப்படுவதால், பொதுமக்கள் திறந்தவெளியை பயன்படுத்தி வருகின்றனர்.முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் சுமார் 40 பஞ்சாயத்துகள் உள்ளன. இதில் 300க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு தற்போது மத்திய அரசின் சுகாதார பாரத இயக்கம் மற்றும் காந்தி தேசிய ஊராக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ்(100 நாள் வேலை திட்டம்),கழிப்பறை இல்லாத வீடுகளுக்கு தனிநபர் கழிப்பறை கட்டும் பணிகள் நடந்து வருகிறது.பெரும்பாலான கிராமங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ரூ.12ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்படும் இக்கழிப்பறை சுகாதார பாரத இயக்கம் திட்டதின் கீழ் முழுப்பணமும் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படுகிறது.
நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் கட்டப்படும் கழிப்பறைகளுக்கு ரூ.2500ஐ 100நாள் வேலை பார்க்கும் பயனாளிக்கும், மீதி பணம் வீட்டின் உரிமையாளரின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படுகிறது.இந்நிலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் பொறியாளர்கள் சிலர், தனிநபர் கழிப்பறை கட்டும் பணியை மொத்தமாக சிலருக்கு உள் ஒப்பந்தத்திற்கு விட்டு கட்டுகின்றனர். அலுவலர்களுக்கு கமிஷன் கொடுத்து கழிப்பறை கட்டுவதால் பெயரளவுக்கு கட்டிவிட்டு வெளிப்புறமாக போட்டோ எடுத்து விட்டு, பயனாளிகளின் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுத்து செல்கின்றனர்.
இவ்வாறு கட்டப்படும் கழிப்பறைகளில் கோப்பைகள், கதவுகள் இருப்பதில்லை. பெரியவர்கள் உள்ளே செல்ல முடியாத அளவிற்கு கட்டப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கழிப்பறையை பயன்படுத்தாமல் திறந்த வெளியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் கிராமங்களில் சுகாதாரகேடு நிலவி வருகிறது.மேலும் இரவு நேரங்களில் பெண்கள் வெளியே செல்வதால் விஷஜந்துகளால் தீண்டப்பட்டு, சிகிச்சை பெறும் நிலையில் உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். வெளியே மலம் கழிப்பதால் ஏற்படும் தீமை குறித்த விளம்பரத்திற்காக அரசு பல கோடி பாய் செலவழித்து வருவது குறிப்பிடதக்கது.