முதுகுளத்தூரில் 2 பேருக்கு டெங்கு காய்ச்சல்: பரவாமல் தடுக்க கோரிக்கை
முதுகுளத்தூரில் டெங்கு காய்ச்சலால் குழந்தை உள்பட 2 பேர் பாதிக்கப்பட்டதையடுத்து அங்கு தடுப்பு நடவடிக்கை எடுக்க அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தேவேந்திரர் நகரைச் சேர்ந்த ஜோசப் மனைவி சாராள் (55). இவர் சில நாள்களுக்கு முன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். ராமநாதபுரம் தனியார் மருத்துவமனையில் அவரது உடல் நிலையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக கூறியதால் அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுள்ளார்.
அதே போல் இதே தெருவைச் சேர்ந்த பன்னீர் என்பவர் மகள் சர்மிளா (3) என்ற குழந்தைக்கும் தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்ததையடுத்து முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்த்த போது சர்மிளாவுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனராம்.
இது குறித்து 6ஆவது வார்டு கவுன்சிலர் சேகர் கூறுகையில், தொடர்ந்து மழை பெய்து வந்ததால் தொற்று நோய்கள் பரவி வருகின்றன. தற்போது எங்கள் தெருவில் 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது போல் மற்றவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க சுகாதாரத் துறை மருத்துவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.