முதுகுளத்தூரில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம்
முதுகுளத்தூரில் வியாழக்கிழமை தேசிய சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சகம் அமைதி அறக்கட்டளையும், அவார்டு டிரஸ்டும் இணைந்து பசும்குடில் காப்பகத்தில் இம்முகாமை நடத்தின. முகாமில் வேளாண்மை அலுவலர் ஞானவீரன் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், நாம் சுற்றுப்புறச் சூழலை தூய்மையாக வைத்துக்கொள்வதால் மனித சமுதாயத்தை நோய் நோடிகள் இல்லாமல் பாதுகாக்கலாம். விவசாயிகள் செயற்கை உரங்களை பயன்படுத்தாமல், இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும். நாம் வீட்டில் பயன்படுத்தும் குப்பைகளையும், கழிவுப் பொருள்களையும் எரித்து விடாமல் மண்புழு உரம் தயாரிக்க பயன்படுத்த வேண்டும் என்றார்.
முகாமில் சுற்றுச்சூழல் கல்வியாளர் ஜாஸ்டின் கமலம் மண்ணின் வளம் பற்றியும், மரம் வளர்ப்பதால் மண் அரிப்பை தடுத்து, மழை வளம் பெருகுவது குறித்தும் சிறப்புரை ஆற்றினார். அவார்டு டிரஸ்ட் இயக்குநர் வி.சின்னமருது வரவேற்றார். முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. முடிவில் டிரஸ்ட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயபிரகர் நன்றி தெரிவித்தார்.