முதுகுளத்தூரில் சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச்செல்வது அதிகரிப்பு
முதுகுளத்தூர் : முதுகுளத்தூரில் வாரசந்தை நாளன்று, சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி செல்வது அதிகரித்துள்ளது. மக்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்வதால் விபத்து அபாயம் ஏற்படுவதுடன், அரசு பஸ்களுக்கும் வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.
கிராமபுற மக்களின் தேவைக்கு போதுமான பஸ்கள் இயக்கப்படவில்லை. அரசு பஸ்கள் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே இயக்கபட்டு வருகிறது. இதனால் தங்களின் வசதிக்கேற்ப கிராமபுற மக்கள் சரக்கு வாகனங்களில் பயணிப்பது அதிகரித்துள்ளது. இது விபத்துக்கு வழிவகுக்கிறது. முதுகுளத்தூரில் வாரச்சந்தை நாளான வியாழக்கிழமைகளில் இச்செயல் அதிகரித்துள்ளதால், அரசு பஸ்களுக்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது.
இதுகுறித்து முதுகுளத்தூர் அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் முத்துராமன் கூறுகையில், “”கிராமபுறங்களுக்கு பொதுமக்களின் வசதிக்கேற்றவாறு, அரசு பஸ்கள் இயக்கபட்டு வருகின்றன. ஆனால் அதையும்மீறி, சிலர் சரக்கு வாகனங்களில் ஆபத்தையும் உணராமல் அளவுக்கு அதிகமாக பயணித்து வருகின்றனர். இதனால் அரசு பஸ்களில் வருவாய் குறைந்து, வழித்தடங்களில் இயக்கபட்ட அரசு பஸ்கள் ரத்து செய்யபடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்து, போலீசார், போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் முறையீடு செய்தும் நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் செய்வறியாத நிலையில் உள்ளோம்”, என்றார்.
http://www.dinamalar.com/district_detail.asp?id=1080546