முதுகுளத்தூரில் அரசு கல்லூரி கட்டுமான பணிகள் படுமந்தம்
முதுகுளத்தூர்:முதுகுளத்தூரில் அரசு கல்லூரியின் கட்டுமான பணிகள் மந்தமாக உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில், திருவாடானை, கடலாடி, முதுகுளத்தூரில் அரசு கல்லூரிகள், 2013 ல் துவங்கப்பட்டு, தற்காலிகமாக அரசு மேல்நிலைப்பள்ளிவளாகங்களில் செயல்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கே, வகுப்புஅறைகள் பற்றாக்குறையாக உள்ளது. அங்குள்ள கட்டடங்களில் 5 பாடப்பிரிவுகளுக்கு 10 வகுப்பறைகள், அலுவலகம், “லேப்’, ஓய்வறை பேராசிரியர்கள் தங்கும் அறைகள் என 20 க்கும் மேற்பட்ட அறைகள் கல்லூரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
வரும் ஆண்டில் கல்லூரிக்கு கூடுதலான வகுப்பறைகளை, அரசு பள்ளி நிர்வாகம் ஒதுக்கீடு செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதால், பள்ளி மாணவர்கள் திறந்தவெளியிலும், மரத்தடி நிழலிலும் படிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. கல்லூரிக்கென, ரூ.7.25 கோடி யில், புதிதாக கட்டுமான பணிகள் துவங்கப்பட்டு, ஓராண்டுகளுக்கு மேலாகியும், பணிகள் மந்தமாக நடக்கின்றன இப்பணிகள் முடிவடைய இன்னும் 3 ஆண்டுகளாகும் நிலை உள்ளதால், பள்ளி நிர்வாகங்கள் சிக்கல்களை சந்திக்கும் நிலை உள்ளது.
இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், “அரசு கல்லூரிகளில் போதிய பேராசிரியர்கள் நியமிக்கப்படாததால், கல்லூரி மாணவர்கள் “பிரீ’ வகுப்புகளில், பள்ளி வளாகங்களில் அத்துமீறி நுழைகின்றனர். மேலும், பள்ளி- கல்லூரி மாணவர்கள் அடிக்கடி சண்டையிடுவதும் அதிகரித்துள்ளதால், கல்லூரி கட்டுமான பணிகளை துரிதப்படுத்தி, கல்லூரி வகுப்புகளை இடைவிடாது நடத்த வேண்டும்,’ என்றனர்.