மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி
முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சர்வதேச பேரிடர் தினத்தை முன்னிட்டு தீயணைப்புத் துறையினர் பேரிடர் மேலாண்மை செய்முறை பயிற்சி அளித்தனர்.
நிகழ்ச்சியில் முதுகுளத்தூர் வட்டாட்சியர் எஸ். ராமமூர்த்தி தலைமை தாங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், என்.சி.சி. திட்ட அலுவலர் எஸ். துரைப்பாண்டியன், நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் மங்களநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் பைசல் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
நிகழ்ச்சியின் போது தீயணைப்பு நிலைய அலுவலர் மணிமுத்து, முன்னணி நிலைய அலுவலர் லிங்கம் ஆகியோர் தீ விபத்து, புயல், வெள்ளம், நில நடுக்கம், அடுக்கு மாடி கட்டட விபத்துகள் போன்றவற்றில் சிக்கயவர்களை மீட்பது பற்றி மாணவர்களுக்கு செய்முறை பயிற்சியின் மூலம் விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் சிவக்குமார் செய்திருந்தார். தீயணைப்பு துறையினர் மாடசாமி, நாகச்சந்திரன் உள்ளிட்டோர் செய்முறை பயிற்சி அளித்தனர்.
முடிவில் ஆசிரியர் துரைப்பாண்டி நன்றி தெரிவித்தார்.
அதே போல், சாயல்குடி அருகே கன்னிராஜபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை பயிற்சிக்கு கடலாடி வட்டாட்சியர் என். ரவிராஜ் தலைமை தாங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியர் ராஜலெட்சுமி, ஊராட்சி தலைவர் சமயந்தி பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ், முன்னணி தீயணைப்பு நிலைய அலுவலர் கமலநாதன் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளித்தனர்.
நிகழ்ச்சியில் கவுன்சிலர் டேவிட், வருவாய் ஆய்வாளர் சிவக்குமார், பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் தமிழ்ச்செழியன், கிராம நிர்வாக அலுவலர் ஐபுக்கனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.