பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் பொருத்த ரூ.25 லட்சம் ஒதுக்கீடு
முதுகுளத்தூர் தொகுதியைச் சேர்ந்த 9 அரசுப் பள்ளிகள் மற்றும் ஒரு தனியார் பள்ளி ஆகியவற்றுக்கு, தொகுதி எம்.எல்.ஏ. மு. முருகன், தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
இது குறித்து மேலும் முதுகுளத்தூரில் திங்கள்கிழமை அவர் தெரிவித்தது:
முதுகுளத்தூர் தொகுதியைச் சேர்ந்த கீழத்தூவல், முதுகுளத்தூர், அலங்கானூர், கடலாடி, பேரையூர், சிக்கல், கன்னிராஜபுரம் ஆகிய ஊர்களில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகள், சாயல்குடியில் உள்ள அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள், திருவரங்கத்தில் உள்ள புனித இருதய மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றுக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் வழங்கப்படுகின்றன.
தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இதற்காக தலா ரூ.2.5 லட்சம் வழங்கப்படுகிறது.
இதற்காக மொத்தம் ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
விரைவில் கருவிகள் வாங்கப்பட்டு இந்த 10 பள்ளிகளிலும் பொருத்தப்பட உள்ளன என்றார்.