சாலையை சீரமைக்க கோரி ஆட்சியரிடம் மனு
முதுகுளத்தூர் அருகே சித்திரங்குடி பறவைகள் சரணாலயத்துக்கு செல்லும் தார்ச்சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகனங்களில் செல்வோர் சிரமப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்கக் கோரி ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு கொடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே சித்திரங்குடியில் பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்கு வெளிநாட்டில் இருந்து பறவைகள் வந்து தங்கிச் செல்கின்றன. இப்பகுதி சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்துள்ளது. சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் பறவைகளின் வருகை குறைந்து விட்டது.
இந்நிலையில் சித்திரங்குடி இறைச்சிகுளம், எஸ்.பி. கோட்டை, கிடாத்திருக்கை போன்ற கிராமங்களுக்கு செல்லும் சாலை மோசமாக இருப்பதால் வாகனங்களில் செல்வோர் மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள் சேற்றிலும், சகதியிலும் சிக்கி விடுகின்றனர். மேலும் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் பேருந்துகள் கிராமத்துக்குள் வராமல் பிரதான சாலையில் நின்று திரும்பி விடுகின்றன. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் முதியோர் நகர் பகுதிக்கு வர சிரமப்படுகின்றனர். இதனை பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே கிராம மக்களின் நலன் கருதி சித்திரங்குடி தார்ச் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது.