கடையில் செல்லிடப் பேசி திருடியவர் கைது
முதுகுளத்தூரில் உள்ள கடையில் செல்லிடப் பேசியை திருடியவரை சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகள் மூலம் சனிக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
முதுகுளத்தூர் பிரதான சாலையில் பொதிகுளம் கிராமத்தைச் சேர்ந்த சந்தானம் மகன் முருகானந்தம் செல்லிடப் பேசி கடை வைத்துள்ளார். இவரது கடையில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள செல்லிடப் பேசி திருடு போனதைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். கடையில் பொருத்தியுள்ள சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகள் மூலம் திருட்டை கண்டுபிடிக்க ஆய்வாளர் மூக்கன் தலைமையில் விசாரணை நடந்தது. இதன்பேரில் தேரிருவேலி கீழப்பச்சேரியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் முத்துமுருகன் (19) என்பவர் கடையில் இருந்த செல்லிடப் பேசியை திருடியது தெரியவந்தது. இதையடுத்து சார்பு ஆய்வாளர் அருள்பிரகாஷம், தலைமைக் காவலர்கள் திருநாவுக்கரசு, முத்துராமலிங்கம், வழிவிட்டான் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் அவரை கைது செய்தனர்.