கடலாடி, முதுகுளத்தூரில் “அம்மா’ திட்ட முகாம்
கடலாடி, முதுகுளத்தூர் பகுதிகளில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கடலாடி அருகே இருவேலி ஊராட்சியில் நடைபெற்ற முகாமுக்கு வட்ட வழங்கல் அலுவலர் மாதவன் தலைமை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர் மாரிப்பாண்டி, கிராம உதவியாளர் சர்க்கரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் குடும்ப அட்டையில் பெயர் நீக்கம், சேர்த்தல், திருத்தம் தொடர்பான 36 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டது.
முதுகுளத்தூர் அருகே கீழச்சிறுபோது வருவாய் உள்வட்டம், காமாட்சிபுரம் ஊராட்சியில் நடைபெற்ற அம்மா திட்ட முகாமுக்கு வட்டாட்சியர் எஸ்.ஆர்.கணேசன் தலைமை வகித்தார். இதில் 12 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டது. முகாமில் அரசு அலுவலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.