ஈராக் நாட்டில் பணிபுரியும் முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்களை மீட்க கோரிக்கை
ஈராக் நாட்டிலுள்ள இருவரை மீட்டுத்தரக் கோரி ஆட்சியரிடம் மனு
ஈராக் நாட்டிற்கு சென்ற தனது கணவரை மீட்டுத்தரக் கோரி கோகிலா என்பவரும், தனது மகனை மீட்டுத்தரக் கோரி நேசம், ஜோசப்மேரியும் மாவட்ட ஆட்சியர் நந்தகுமாரிடம் மனு அளித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ளது பருக்கைகுடி. இந்த ஊரைச் சேர்ந்த கோகிலா என்பவரின் கணவர் ஆனந்தன். இவர்களுக்கு அஸ்மிதா என்ற மகள் உள்ளார்.
தற்போது கோகிலா 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். ஆனந்தன் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் ஈராக் நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார்.
தற்போது அங்கு உள்நாட்டு போர் நடந்துவரும் நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஆனந்தன், போர் நடப்பதால் ஊருக்கு அனுப்பும்படி வேலை பார்த்த கம்பெனியில் கேட்டுள்ளார்.
ஆனால் அவர்கள் அனுப்ப மறுத்து பாஸ்போர்ட்டையும் தர மறுப்பதாக கூறியுள்ளார்.
இதன் பின்னர் அவரிடம் இருந்து எந்த தகவலும் இல்லாததால் அவரது நிலைமை தெரியவில்லை.
எனவே அவரை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டுவர வேண்டும் என்று ஆட்சியர் நந்தகுமாரிடம் மனு கொடுத்தார்.
இதே போல அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் கடலாடி அருகே உள்ள எம்.சவேரியார் பட்டினம் பகுதியைச் சேர்ந்த நேசம்,ஜோசப்மேரி ஆகியோர் தனது மகன் நாதன் ஈராக் நாட்டில் தவிப்பதாகவும்,அவரை மீட்டு கொண்டுவர வேண்டும் என்று கோரி மனு கொடுத்தனர்.
இந்த மனுக்களை பெற்றுக் கொண்ட ஆட்சியர் இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.