அண்ணனை கொல்ல முயன்ற தம்பி கைது
முதுகுளத்தூர் குற்றவியல் நீதிமன்றம் வளாகம் முன்பு, முன்விரோதம் காரணமாக செவ்வாய்க்கிழமை அண்ணனை கத்தியால் குத்த முயன்ற தம்பியை போலீஸார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகில் உள்ள பி.கீரந்தையைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன்கள் கருணாநிதி (49), கணேசன் (45). இருவருக்கும் இடையே யான பிரச்னை காரணமாக முதுகுளத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில், விசாரணைக்காக இருவரும் நீதிமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை வந்துள்ளனர். அப்போது, நீதிமன்ற வளாகத்தில் நின்று கொண்டிருந்த கருணாநிதியை, கணேசன் தகாத வார்த்தைகளால் பேசியதுடன், மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்த முயற்சித்துள்ளார். அங்கு, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் கணேசனை கத்தியுடன் மடக்கிப் பிடித்து, காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
இது குறித்து, முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் கருணாநிதி அளித்த புகாரின்பேரில், இன்ஸ்பெக்டர் ஜேசு வழக்குப் பதிந்து, கணேசனை கைது செய்தார்.