மூளை இருக்கா, இல்லையா?

Vinkmag ad
human brainஉடல் நலம்
 
எஸ் வி வி 
மூளை இருக்கா, இல்லையா?
 
 

டுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறளாக நமது உடலுக்குள் ஒரு நபர் இருப்பதை அறிவீர்கள் தானே, அது எப்படி,  அவர் உதவியால் தான் அவரை  நீங்கள் அறியவோ, ஒப்புக் கொள்ளவோ, ஏன் மறுக்கவோ கூட முடியும்! (அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பாரே மாணிக்கவாசகர், அப்படி!)….ஏம்பா, ஏதாவது உருப்படியான சங்கதியா, மூளையோடு தான் பேசறியா என்று கேட்டுவிடாதீர்கள்… மூளை பற்றி தான் பேசுவதே.

உடலின் உறுப்புகளில் அத்தனை பெரியது அல்லாத, ஆனால் அத்தனைக்கும் தலையாய உறுப்பாக விளங்குவது மூளை. மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பது தவத்திரு மூளையடிகளுக்குப் பொருந்தும். Z+ பிரிவில் பாதுகாப்பு கொடுக்கப்படும் அளவு அவரைச் சுற்றி அரணாக உரிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. வலுவான மண்டை ஓட்டுக் கட்டிடத்திற்குள் சுற்றிலும் திரவம் இருக்க அலை அலையாக  சவ்வும்  சூழ்ந்திருக்க அவ்வளவு விரைவாக ஆபத்து நேராது தடுப்புக் காவல் போடப்பட்டிருக்கிறது.
நிறைய மடிப்புகளோடு  மலையும், மடுவுமாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஏற்பாட்டினால்  குறுகிய இடத்திற்குள்ளாகவே அதிக பரப்பளவோடும், வேலைத்திறனோடும் தனது ஆசனத்தில் கொலுவிருக்கிறது மூளை. அதற்குள்ளேயே பார்வை, பேச்சு, கை கால் அசைப்பு இலாக்காக்கள் கச்சிதமாக செயல்படுகின்றன. அதனாலேயேதான் தலையில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டால் அல்லது ரத்தக் கசிவு போன்ற பிரச்சனை நேரிட்டால் பார்வை, பேச்சு, கை கால் அசைவு போன்றவை பாதிப்புக்குள்ளாவதைப் பார்க்கிறோம்.
ஆல்கஹால் மற்றும் இதர போதை பொருள்களை உட்கொள்ளும் போது, அவை இரத்தத்தில் கலந்து உடனடியாக மூளைக்குள் சென்றதும் தமது சேட்டைகளைக் காட்டத் தொடங்குகின்றன. நமது கதாநாயகன் “பார்த்துப் போ, நீ பார்த்துப் போ” என்று ஒரு கில்லாடி நடை நடப்பதற்கும், ‘குற்றம் புரிந்தவர் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது’ என்று வாய் குழறுவதற்கும் காரணம், தொடர்புள்ள உணர்ச்சி நரம்புகளுக்குள் நமது சரக்குகள் செய்யும் கலாட்டா தான்.
ஒரு ரோஜா மலரைப் பார்க்கிறீர்கள்…ஏற்கெனவே உங்களது மூளைக்குள் பதிவாகி இருக்கும் அதன் நறுமணம் முதற்கொண்டு ரோஜாவை மையப்படுத்தி இரா.நடராசன் குறுநாவல் எழுதியிருப்பது, ரோஜா என்ற சொல் இடம் பெறும் திரைப்பாடல்கள், ரோஜா என்ற பெயரில் உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும் பெண்கள்…என்று மூளை ஏராளமான செய்திகளை எடுத்துக் கொடுக்கும்.  அந்தப் பூவைக் கிள்ளாதே என்று உங்களுக்குப் பாடம் நடத்தவோ, சரி போனால் போகிறது ஒன்றே ஒன்று பறித்துக் கொண்டு இடைத்தைக் காலி செய்துவிடு என்று அறிவுறுத்தவோ பல்லாயிரக்கணக்கான வேதிவினைகளை நடத்துகிறது மூளை.
வீட்டில் குழந்தைகள் ரப்பர் தொலைந்தால் மறக்காமல் வந்து சொல்வார்கள். ஆனால், பள்ளிக்கூடத்தில் ஆசிரியை வகுப்புக்கு வெளியே இரண்டு மணி நேரம் வெயிலில் முட்டி போட்டு நிற்க வைத்தார் என்பதைத் தாமாக எளிதில் சொல்லிவிட மாட்டார்கள். மூளையும் அப்படித்தான். நமது உடலில் எங்காவது கல்லோ, முள்ளோ குத்திவிட்டால் போதும்…வீலென்று அலற வைக்கும் மூளை, விரலே வெட்டுப்பட்டுத் துண்டாகும் நேரங்களில் மிகவும் பக்குவமாகத் தான் கவனத்திற்குக் கொண்டு வரும். ஆபத்து நேரத்தில் பரபரப்பைத் தவிர்த்து நிதானமாக அணுக உதவும் உத்தி அது.
மூளையடிகள் ஆசிரமத்தில் முழு ஜனநாயகம் மற்றும் உள்ளாட்சித் தத்துவம் நடைமுறையில் இருக்கிறது. தானே எல்லாம் என்ற தலைக்கனப் போக்கு தலைக்குள் இல்லை என்பதை எப்படி அதிகாரப் பெருமக்களுக்குச் சொல்வது என்று தெரியவில்லை… தண்டுவடத்திற்கு சில வேலைப் பிரிவினைகள் செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக அனிச்சைச் செயல் விவகாரங்களை  அய்யா தண்டுவடனார் பார்த்துக் கொள்வார். அவர் வசம் தமது பொறுப்பு வேலைகளை எடுத்துச் செய்ய 33 ஜோடி நரம்புகள் (Spinal nerves) உத்தரவுக்குக் காத்திருக்கின்றன. மூளைக்குள் 12 ஜோடி கிரேனியல் நரம்புகள் இருக்கின்றன.இவற்றில் ஏதாவது பாதிப்பு ஏற்படும் போது காது கேட்டல், கண் பார்த்தல், கால் அசைப்பு போன்றவற்றில் பாதிப்பு ஏற்படுகிறது.
அன்றாட வேலைகள், பொதுவான விஷயங்கள் இவற்றை மூளையின் வலது புறம் கவனித்துக் கொள்கிறது.  கற்பனைக் குதிரைகளின் லாயம் இடது பக்கத்தில் இருக்கிறது. அங்கிருந்து தான் கதை, கவிதை, ஓவியம், ஆடல், பாடல், சிற்பம் இன்னபிற கவின் கலைகளுக்கான திறமை பீறிட்டெழுகிறது.
உடல் எடுத்துக் கொள்ளும் ஆக்சிஜன் அளவில் மூளை ஆசானின் தேவைக்கு மட்டுமே கால் பங்கு (25 %) தேவைப்படுகிறது.  அளவு போதாத போது சோர்வு ஏற்படுகிறது. அசதி தோன்றுகிறது. பேசிக் கொண்டிருக்கும்போதே சொற்களை அவ்வு அவ்வு என்று கத்தரித்துக் கொண்டே கொட்டாவி வருகிறதே, ஆக்சிஜன் போதாமையால் மூளை வாயின் மூலம் காற்றை அப்படியே ஒரே அள்ளு அள்ளிக் கொள்கிறது என்றுதான் பொருள்.
பிறக்கும் போது(ம்) அழுகின்றான் என்று பாடினாரே சந்திரபாபு, அது உடனடி ஆக்சிஜன் அரவணைப்பின் வரவேற்பு. குழந்தை அழாவிட்டால் அதுதான் கவலைப்படுவது. மிகச் சிறு நேரம் ஆக்சிஜன் மூளையை எட்டாவிட்டால் கூட அது பின்னர் குழந்தையின் வளர்ச்சிப் பாதையின் மைல் கற்களில் சில பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகிறது.
கருவிலேயே திருவுடையார் என்பது திறமிக்க மனிதர்களைப் பாராட்டும் ஒரு அடைமொழி என்பதோடு விட்டுவிடாதீர்கள். அன்னையின் வயிற்றில் தோன்றிய இரண்டு மாதங்களுக்குள் மூளையின் எதிர்காலச் செயலாக்கம் குறித்த தீர்மானங்கள் நிகழ்ந்துவிடுகின்றன. அப்போது மூளையின் அளவு சிறிதானாலும் உள்ளமைப்பு கிட்டத்தட்ட முழுமையும் அமையப் பெற்றுவிடுகிறது.  இதனால் தான், கருவுற்ற பிறகு ஒரு பெண் தேடித் தேடி ஊட்டமான உணவுப் பொருள்களை உட்கொண்டாலும் கூட, அதற்கு முன்பே அவளது உடல் நலன் இருக்கும் தன்மைக்கேற்பவே குழந்தையின் மூளைத் திறன் அமைகிறது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். இன்னும் சொல்லப் போனால், திருமண வயதை எட்டும் போதே ஒரு பெண் தாயாவதற்குத் தகுதி மிக்க உடல் வலுவைக் கொண்டிருக்க வேண்டும். மிகச் சரியாகச் சொல்வதானால், பூப்படையும் பருவத்திலிருந்தே பெண்கள் மிகுந்த ஆரோக்கியம் தரும் உணவு வகைகளை உட்கொள்வதை பெற்றோர் உறுதி செய்யவேண்டும்.
அப்படியானால், மனிதர்களின் அறிவை வம்சாவழி முடிவு செய்வதைக் காட்டிலும் சமூகச் சூழலே அதிகம் தீர்மானிக்கிறது என்று காண முடியும். சுட்டுப் போட்டாலும் இவங்களுக்கெல்லாம் கணக்கு வராது, அறிவு கிடையாது என்றெல்லாம் காலகாலமாகப் பேசுவதில் அறிவியல் ஆய்வு ஒன்றும் கிடையாது, மோசமான சாதியப் பார்வை தான் என்று புரிந்து கொள்ள வேண்டும். ஊட்டமான உணவு உண்ணவும், உடல் நலம் பேணவும் வாய்ப்பும், வசதியும் அற்ற பெண்கள் எப்படி வலுவான குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியும்? மூளை உருவாக்கக் காலத்தில் சத்தும் சாரமும் அற்ற வாழ்க்கையின் அடுத்த தலைமுறையாகப் பிறப்பது யாருடைய குற்றம்?  கருவுறும் பெண்களில்  எழுபது சதவீதம் பேருக்குமேல்  இரத்த சோகை பீடிக்கப்பட்டிருப்பதாக அரசே புள்ளி விவரம் தரும் தேசத்தில் வயிற்றுக்குச் சோறிட வேணும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் என்ற பாரதியின் தீர்க்க சிந்தனை எத்தனை தெறிப்பாய் வந்து விழுகிறது பாருங்கள்.
அதே போல் தான் மூளையில் ஆண், பெண் வேறுபாடுகள் இருப்பதாகச் சரடு விடுவதும். சாதி, இனம், மதம், பாலினம் இவற்றில் பிரிவினை பாராட்டும் சமூகத்தின் வெளிப்பாடு தான் மூளையிலும் பிரதிபலிக்கிறதே தவிர, இயல்பாக ஒரு வேறுபாடும் இருக்க நியாயம் கிடையாது.
உடலுக்கு ஓய்வு தேவைப்படுவது என்பது மூளைக்கும் சேர்த்துத்தான். நாம் ஓய்வு எடுக்கும் போதும், இதயமோ, நுரையீரலோ ஓய்வெடுத்து விடுவதில்லை. எஜமானன் தூங்கும் போதும் விசுவாசமிக்க வேலையாள் ஓடியாடித் தனது கடமைகளைச் செய்வது போலவே! அது தான் கோமா எனப்படும் மூளை தனது செயல் திறன் இழந்த நிலை ஏற்படும் போது கூட இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது. நுரையீரல் இயங்குகிறது.
உடல் இயக்கத்தின் தொடர்புப் புள்ளிகள் மூளையில் பொருந்தி இருக்கின்றன, அவை பாதிப்புற்றால் உடல் அதைத் தெரிவிக்கிறது என்று பார்த்தோம் இல்லையா, ஆனால் மூளையின் உள்ளே புகுந்து அவற்றைச் சரி செய்ய முடிவதில்லை. அதற்குப் பதிலாக பாதிப்புற்ற உடல் பகுதிகளுக்கு உடற்பயிற்சி (பிசியோ தெரபி) கொடுத்து இயக்கத்தைப் படிப்படியாக எதிர் முனையில் இருந்து மீட்டெடுக்கிறோம்.  பேச்சுப் பயிற்சி, நினைவாற்றல் மீட்பு, கை கால் இயக்கம் என இவற்றை அதனதன் இயங்கு புள்ளியில் தான் நாம் சரி செய்ய முடிகிறது.
இதிலிருந்து ஆடி ஓடி வேலை செய்தால் அலுப்பிருக்காது என்ற பழைய திரைப்பாடலுக்கு வித்தியாசமான பொருள் கிடைப்பது தெரிகிறதா…வீட்டில் முடங்கிக் கிடக்கும் மனிதர்களை விடவும், வயதான காலத்திலும் ஏதாவது உடல் உழைப்பு தேவைப்படும் வேலைகளைச் செய்பவர்கள் மிகுந்த உடல் நலத்தோடும், உற்சாகத்தோடும் காணப்படுவதைப் பார்க்கலாம்.
மூளையில் மின்னோட்டம் இருப்பதால் அதைப் பயன்படுத்திச் சில மருத்துவ பரிசோதனைகள் (EEG) செய்து பிரச்சனைகளைக் கண்டறிய முடிகிறது. மூளை செயல்பாட்டின் முக்கிய பகுதியான நியூரான்கள் பாதிப்பால் அழிந்தால் மீண்டும் தோன்றுவதில்லை. வயது கூடக் கூட அவற்றின் திறன் தேய்கிறது. எனவே தான் முதியோர் சிலருக்கு  டிமென்ஷியா, அல்ஜைமேர்ஸ் போன்ற பிரச்சனைகள் தோன்றுகின்றன. மின்னோட்டத்தின் சில பிரச்சனைகளால் தான் வலிப்பு நோய் கூடத் தோன்றுகிறது. அதைக் கட்டுப்படுத்தி சிகிச்சை வழங்க மருத்துவத்தில் இடம் உண்டு. மாற்று மருத்துவத்திலும் நிறைய வாய்ப்புகள் உண்டு.
எந்தச் சண்டையிலும் ஒரு கட்டத்தில் வந்து தெறிக்கும் வசவு, உனக்கு மூளை இருக்கா என்பது; மூளை இல்லாதவர்கள் யாரும் கிடையாது. அதை முறையாகப் பயன்படுத்துகிறோமா இல்லையா என்பது தான் கேள்வி. அஷ்டாவதானி, தசாவதானி, சதாவதானி என்றெல்லாம் மிகத் திறமையான நினைவாற்றல் கொண்ட மனிதர்கள் தமது சிறப்புப் பயிற்சியினால்தான் இது சாத்தியம் ஆனது என்று மனம் திறந்து கூறுவதைக் கேளுங்கள். அதே போல், ஆட்சிப் பொறுப்பில் உட்கார்ந்து கொண்டு அனைத்து விவரங்களும் அறிந்த மனிதர்கள், ஏன் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டுக்குக் கதவு திறந்து விடுகிறார்கள்,  நிதித்துறையை ஏன் பன்னாட்டு நிதி மூலதனத்தின் வேட்டைக்கு பலி கொடுக்கிறார்கள் என்று யோசித்துப் பாருங்கள், ஆட்சியாளர்கள் மூளை இல்லாமல் செய்கிறார்கள் என்று பொருளா? இதெல்லாம் மூளை இல்லாமல் நடப்பதில்லை, மூளை யாருடைய நலனுக்காக இயங்குகிறது என்பதில் தான் அடங்கி இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்வீர்கள்..
அதே போல், சாதாரண மனிதர்களின் மூளைக்கும் இவற்றையெல்லாம்  புரிய வைக்க முடியும், பதிலடி கொடுக்க வைக்க முடியும், தங்களைத் தற்காத்துக் கொள்ள வைக்கும் சூத்திரம் கற்க வைக்க முடியும் என்பதையும் அறிந்து கொள்வீர்கள்!
தலையாய கடமை, தலைக்குள் இருக்கும் நமது தலைவரைப் புரிந்து கொள்வது தான். வணக்கம் தலைவா…
மருத்துவர் பி வி வெங்கட்ராமன், எம்.டி. (ஓமியோபதி) 
அவர்களது ஆலோசனைக் குறிப்புக்களிலிருந்து
மூளை ஜோக்
(இதற்கான படம் இணைக்கப்பட்டுள்ளது )
 
டாக்டர் 1 :  ஆசாமிக்கு மூளையே இல்ல போலத் தெரியுதே?
டாக்டர் 2 : இருந்தா, நம்ம கிட்ட வந்து சிக்கி இருப்பானா டாக்டர்!
நன்றி:  Bank Workers Unity-ஜனவரி 2012– உடல் நலம்-

News

Read Previous

தமிழக அரசும் தமிழறிஞர் விருதும் !

Read Next

அழகன்குளம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *