கேழ்வரகு – இயற்கை வைத்தியம்
கேழ்வரகு, சிறு தானிய வகையை சேர்ந்தது. முன்பு, அரிசியை போல, கேழ்வரகும், அடிக்கடி சாப்பிடும் உணவாக இருந்தது. தற்போது, துரித உணவுகளின் வரவால், சத்துக்கள் நிரம்பிய சிறுதானிய உணவுப்பொருட்களை சாப்பிடுவது குறைந்து விட்டது. கேழ்வரகு சாப்பிடுவதால், கிடைக்கும் பலன்களை அறிந்த பின், மாதத்தில் ஒருமுறையாவது, உணவில் சேர்க்க முற்படலாம்.
கேழ்வரகில், கால்சியம், இரும்பு சத்துக்கள் அதிகம் உள்ளன. பாலை விட, கேழ்வரகிலே கால்சியம் சத்து நிரம்பியுள்ளன. கேழ்வரகை,
தினசரி உணவில் சேர்த்தால், உடல் வலுபெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடல் சூட்டை தணிக்கும்.
குழந்தைகளுக்கு, கேழ்வரகுடன், பால், சர்க்கரை சேர்த்து, கூழாக காய்ச்சி கொடுக்கலாம். இது, வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. தினசரி கேழ்வரகு கூழ் சாப்பிட்டு வர, குடற்புண் குணமடையும்.
மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள், கேழ்வரகு சாப்பிடுவது நல்லது. மேலும், கேழ்வரகு சாப்பிட்டால், உடல் எடை குறையும். இதில் உள்ள, நார்ச்சத்துக்கள் மலச்சிக்கலை தடுக்கும். கேழ்வரகு ஜூரணமாக, நேரம் எடுத்து கொள்வதால், சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த உணவாகும்.
சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகை, அடை, புட்டு செய்து சாப்பிடலாம். கூழ் அல்லது கஞ்சியாக சாப்பிடக்கூடாது. இது, சீக்கிரம் ஜீரணம் அடைந்து விடும். கூழாக குடிக்கும் போது, அதிகப்படியான கொழுப்பு குறையும். கேழ்வரகில், இரும்பு சத்து அதிகம் உள்ளது. ரத்த சோகை நோய் வராமல் தடுக்கிறது. இதில் அதிக அளவு கால்சியம் இருப்பதால், கர்ப்பிணிகள் தினம் உணவில் சேர்த்து கொள்ளலாம்.
குறிப்பு: கேழ்வரகில், ஆக்ஸாலிக் அமிலம் அதிகம் உள்ளதால், சிறுநீரக கற்கள் உள்ளவர்கள், தவிர்ப்பது நல்லது.