ஹஜ்ரத் செய்யதினா நாகூர் பாதுஷா நாயகம் (ரலி) அவர்களின் நாற்பது பொன்மொழிகள்
ஹஜ்ரத் செய்யதினா நாகூர் பாதுஷா நாயகம் (ரலி)
அவர்களின் நாற்பது பொன்மொழிகள்
- “வாழ்க்கை” என்பது மல்லிகைப்பூ பரப்பிய படுக்கையல்ல. அது சேவையின் பம்பரம்.
- தன்னை உணர்ந்தவன் தன் இறைவனை அறிகின்றான்.
- வானங்களில் தேடினேன், பூமியிலும் தேடினேன், நான் தேடிய மெய்ப்பொருளை இதயத்தின் இருள் அறையிலேயே கண்டேன்.
- போதுமென்ற மனதுடன் நீ வாழ். செல்வந்தனாகி விடுவாய்.
- பொய்யே நோயாம். உண்மையே அருமருந்தாம்.
- அறிவு உடலுக்கு உயிர் ; அன்பே கனி ; தன்னடக்கமே அதன் பிரதிபலிப்பு.
- பசித்தவர்கட்கு உணவு, தண்ணீர் வழங்கி உதவி செய்.
- அளவுக்கு மீறிய ஆசை, மானிடனைக் குருடனாகவும், செவிடனாகவும் செய்து விடுகின்றது.
- நல்லதைப் பேசுக. முடியாதாயின் வாய்மூடி இருப்பதே சிறந்தது.
- இன்னலைக் கண்டு இதயம் கலங்காதே, இன்னலின் இறுதியில் இன்பம் உண்டு.
- பிறர் கஷ்டத்தைப் பார்த்து மனம் மகிழாதே, அது மிருகக் குணத்தைச் சேர்ந்தது.
- பிறர் குற்றம் காண்பதும், தன் குற்றம் மறைத்தலும் மடமையின் லட்சணம்.
- நல்லதை நாடு ; தீயதை விலக்கிவிடு.
- வாழ்க்கையில் தீயதை நினைத்து தீயதை அடையாதே.
- மறுமை வாழ்விற்காக உன் பொருளைத் தர்மம் செய்து பலனைப் பெற்று கொள்வாயாக.
- உன் நல்ல நினைவால், உன்னைச் செம்மைப் படுத்தி ஆன்மீக சிகிச்சைப் பெற்றுக்கொள்.
- ஆத்மா சித்தி பெற ஒரு சிறந்த குருவை நாடி உபதேசம் பெற்றுக் கொள்.
- தூங்கியது போதும், விழித்தெழுந்து நல்லதைச் செய்து கொள்.
- அர்த்தமற்ற அதிக பேச்சு, ஆபத்தை விளைவிக்கின்றது.
- துன்பமெனும் முட்செடியில், இன்ப ரோஜா மலர் அரும்புகின்றது.
- ஆடம்பர வாழ்வு, அழிவிற்கறிகுறி.
- ஆத்திரம் தோன்றும் சமயம் அவசரப்படாதே, உள்ளத்தைக் குமுறிக் கொதிக்க விடாதே.
- பசிப்பிணியால் மக்கள் படும் துயரை உனக்கு அதிகப்பசி ஏற்படும் சமயம் சற்று சிந்தனை செய்து பார்.
- இலட்சியமில்லாத வாழ்க்கை, அச்சாணி இல்லாத தேரைச் சாரும்.
- நீ நேர்முகமாகவும், மறைமுகமாகவும் செய்வதை இறைவன் தினமும் கவனித்து வருகின்றான்.
- எவன் வாழ்க்கையில் எல்லை மீறி வருகின்றானோ, அவனது வாழ்வே நெருக்கடியான புதைகுழியாகும்.
- உங்களிடம் உள்ள பொருள்கள் அழிந்து விடும். இறைவனிடம் உள்ள செல்வமே அழியாத செல்வம்.
- மறுமைக்குரிய சாதனமின்றி மண்ணறையில் பிரவேசிப்பவர்கள், கப்பலின்றிக் கடல் கடப்பவர் போலாவார்.
- மானிடனின் அகந்தை, மனிதனை இகழ்ச்சிக்கு வழி காட்டுகிறது.
- உண்மையிலும், உத்தமமான காரியத்திலும் சிறப்பு பெறுவதற்கு எப்பொழுதும் சேவையாற்றுங்கள்.
- மனித வாழ்வின் இலட்சியம், மானத்துடன் வாழ்வதேயாகும். மானத்துடன் உயிர் காப்பாற்றப்பட வேண்டும்.
- வாழ்வில் மனோ அமைதியை நீ நாடுவாயாகில், கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைந்துக்கொள். ஏனெனில், பேராசைக்காரனின் வேலை எந்த அளவிலும் திருப்தி பெறாது.
- வாழ்க்கைப் பூங்காவனத்தில் நீ புகழ்பெற நாடினால், மேன்மைபெற விரும்பினால் மக்களிடையே வாழ்வதற்கு முதலில் கற்றுக்கொள்.
- தெய்வத்தின் கருணை ஒரு அமுதசுரபி. அது இறைக்க குறையாத வற்றா ஊற்று.
- கடும் சோதனையைக் கண்டு சிரிப்பவன் அச்சோதனையில் வெற்றி பெறுகின்றான்.
- ஆபத்துகள் ஏற்படும் சமயம் இறைவனை நினைப்பதும், இன்பத்துறையில் நீராடும் சமயம் இறைவனை மறப்பதும் அறிவுடையோர்கள் செயலன்று.
- அதிகாரத்தினால் மற்றவர்களை ஆட்சி செய்வதை விட, அன்பினால் ஆட்கொள்வது சாலச் சிறந்தது.
- இன்பங்களைப் பெற முயற்சி செய்யாதீர்கள். இலட்சியங்களை அடைய முயற்சி செய்யுங்கள்.
- உன் ஆஸ்திகளைச் செலவிடு. பணப்பெருமையால் ஏழைகளை இகழாதே. உன்னைச் சீர்ப்படுத்திக் கொள்.
- அறிஞர்களை நெருங்கிக் கல்வியையும், ஒழுக்கம், தூய நடத்தைகளையும் படித்துக் கொள். ஏழை எளியவர்கட்கும், உன் சுற்றத்தார்கட்கும் உன் பொருளைத் தந்து ஆதரவு காட்டு. தூய சிந்தனையுடன் மக்களோடு பழகு. இறைவனின் விதிவிலக்குகளை முதலில் நீ நடந்து, பிறரையும் நடக்க முயற்சி செய். இறைவனைப் பயந்து உன் வணக்கங்களை செய்.
படியுங்கள் & பகிருங்கள்
🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹
நூல் : நாகூர் நாதர்