நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு
நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு
நடமாடும் பல்கலைக்கழகம் என்றும், நாவலர் எனவும் அன்போடு அழைக்கப்பட்டு வந்த இரா.நெடுஞ்செழியன் வாழ்ந்த காலத்தில் அவருடனான என் தொழில் சார்ந்தத் தொடர்பு நீடித்து நிலைத்து இருந்தது. தற்போது அவரின் நூற்றாண்டு நிகழ்ச்சிகள் களை கட்டுவதையடுத்து அவருடனான எனது ஒரு நினைவுகளை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நாவலர் நெடுஞ்செழியன் நிதியமைச்சராக இருந்த காலகட்டத்தில் ஒருமுறை அவர் அழைத்தச் செய்தியாளர் கூட்டத்தில் நானும் பங்கேற்றேன். இளம் வயதினனாக இருந்த நான், தினமலர் செய்தியாளனாக அவரிடம் ஒரு கேள்வியைக் கேட்கப் போக, சக நிருபர்கள் என்னை எரித்து விடுவது போலப் பார்த்து முறைத்தனர்.
இதுதான் கேள்வி-பதில்:
நூருல்லா: திராவிட இயக்கத் தலைவர்களுள் ஒருவரான தங்கள், பிராமண எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருந்திருக்கிறீர்கள். இத்தகைய சூழலும் சுபாவமும் கொண்ட நீங்கள், ஜெயலலிதா தலைமையின் கீழ் பணியாற்ற முன்வந்தது ஏன்?
நாவலர்: அதற்கென்ன செய்வது? அவர் சொன்னால் தான் தமிழர்கள் கேட்கிறார்கள். நானும் கேட்கத் தொடங்கி விட்டேன்.
சினம் கொண்டு சீறுவார் என்று நான் பயந்து எதிர்பார்த்த நிலையில் அவர் பொறுமையோடு பதிலளித்தது என்னை நெகிழ வைத்தது.
இதே போன்ற மற்றொரு சம்பவமும் உண்டு
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடம் சார்பில் தேனாம் பேட்டையில் உள்ள காமராஜர் திடலில் ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அப்போது தமிழக அமைச்சராக இருந்த நாவலர் நெடுஞ்செழியன் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சி முடிந்து அவர் காரில் ஏறிச் சென்ற சமயத்தில் அவரின் அருகில் தான் நின்றிருந்தேன்.
“ஐயா ஒரு சந்தேகம்” என்றேன்.
“கேளுங்கள்” என்று சிரித்துக் கொண்டே சம்மதித்தார்.
“தாங்கள் தான் நாத்திகவாதி ஆயிற்றே! ஆன்மிக விழாவில் கலந்துகொள்ள உங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது?” எனக் கேட்டேன்.
அதற்குப் பதில் அளித்த அவர் தனக்கே உரித்தான லாவகப் பாணியில், “என்னையும் ஒரு சக்தி ஆட்டிப் படைக்கிறது. அதனால் தான் வந்தேன்” என்றார்.
நெடுஞ்செழியன் மனைவியான விசாலாட்சி நெடுஞ்செழியன், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியின் பக்தை என்பதை இங்கே நினைவு கூர்ந்து பார்க்க வேண்டும்.
ஆர் நூருல்லா ஊடகன் 09-7-2020
9655578786