சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம்
சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம் -20.12.2022.
இவ்வுலகில் அனைத்து
மனிதர்கள் படைப்பு.
இறைவன் படைப்போ !,
இயல்பாய் நிகழும்
இனப்பெருக்கமோ ! ,
அனைத்து மனிதருக்கும்
அன்னை -தந்தை ஒன்று.
பசியும் ஒன்று , உறக்கமும் ஒன்று.
ஜனனம் , மரணமும் ஒன்று .
சிவப்பு நிற உதிரமும் ஒன்று.
சதையும்,தசையும் ,எலும்பும் ஒன்று.
அவரவர் மரபணுவிற்கேற்ப
அவரவர் பிறந்த சூழ்நிலைக்கேற்ப
அவரவர் தோலின் நிறமும் ,
அவரவர் உருவ அமைப்பும்
அமைவது உண்டு. அதுவே
அன்றி வேறேதும் வேறுபாடு
அன்று இவ்வகிலந்தன்னில்.
பிறந்ததால் வருவதன்றோ
மத,இன,சாதி ,மொழி ,
நிறமெனும் வேறுபாடு.
வளர்கையில் வருவதன்றோ
பணம் , பதவி ,அந்தஸ்தெனும்
பலவித வேறுபாடு .
நிலையற்ற வாழ்வில் எதுவும்
நிரந்தரமில்லை ஆயின்
நினைப்பினில் மட்டும் ஏன்
நிலவ வேண்டும் வேறுபாடு.
மனிதனில் வேறுபாடு மறக்க
மனதினில் மாறுபாடு வேண்டும்.
அன்பினால் அகிலந்தன்னில்
அனைவரும் இணையவேண்டும்.
பண்பினால் , பரந்த மனதால்
பாசத்தால் பிணைய வேண்டும்.
வேறுபாடுகள் மறந்து – மனித
மாறுபாடுகள் களைந்து – பிறந்த
அனைவரும் ஒன்றே என்று
இனிவரும் காலங்களில் -நம்
இதயத்தில் எண்ணம் கொண்டால்
உதயமாகும் எல்லோர்க்கும்
ஒளிமயமான எதிர்காலம்.
அன்புடன் ,
சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம்.