அகில் குரேஷி
நீதித்துறையின் முதுகெலும்புகள் திரு.அகில் குரேஷி போன்றோர்கள்:
# இரண்டு ஆண்டுகள் இழுத்தடிப்புக்கு பின் உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக ஒன்பது நீதிபதிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏன் இரண்டு வருச இழுத்தடிப்பு என்றால்… அந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த நீதிபதி அகில் குரேஷியின் பெயரை பட்டியலில் சேர்க்கக்கூடாது, அதனை நீக்குங்கள் என்று ஒன்றிய அரசு நிர்பந்தித்தது. “அகில்குரேஷி பெயரை நீக்க முடியாது, ஏனென்றால் அவர் மிகவும் நேர்மையானவர், எப்போதும் நீதியின் பக்கம் நிற்பவர்” என்று அவருக்கு ஆதரவாக கருத்துசொல்லி அவர் பெயரை பட்டியலில் வைத்திருந்தவர் உச்சநீதிமன்ற நீதிபதி ரோகின்டன் பாலி நரிமன்.
கடந்த 12-ம் தேதி நீதிபதி நரிமன் ஓய்வுபெற்றார். இப்போது அகில் குரேஷியின் பெயரை நீக்கிவிட்டு மற்ற நீதிபதிகளை நியமித்துவிட்டார்கள்.
யார் இந்த அகில் குரேஷி?
2004-ம் ஆண்டு குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றவர் குரேஷி. 2010-ம் ஆண்டு குஜராத்தில் சோராபுதீன் என்கவுண்டர் வழக்கில் அமித்ஷாவை இரண்டு நாள் காவலில் எடுத்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
2011-ம் ஆண்டு குஜராத்தில் ஊழல் வழக்குகளை விசாரிக்க மேத்தா என்ற ஓய்வு பெற்ற நீதிபதியை லோக்ஆயுக்தா அமைப்பின் தலைவராக நியமித்தார் ஆளுநர் கமலா பேனிவால். அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடி இந்த நியமனத்தை எதிர்த்தார். பிரச்சனை குஜராத் நீதிமன்றத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. ஆளுநர் நியமித்தது சரி என்று மோடிக்கு எதிரான தீர்ப்பை கொடுத்தவர் நீதிபதி அகில் குரேஷி.
2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க தயாராக இருந்த அகில் குரேஷிக்கு அதிர்ச்சி ….. காரணம்…. ஏஎஸ் தாவே என்கிற நீதிபதியை பொறுப்பு நீதிபதியாக நியமித்து குரேஷியை பம்பாய் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதாக உத்தரவு வருகிறது. குஜராத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் அசோசியேனை சேர்ந்த 1200 வழக்கறிஞர்கள் குரேஷிக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தை நாடுகிறார்கள். அதனையடுத்து அந்த உத்தரவு மாற்றப்படுகிறது. பின்னர் 2019 மே மாதம் மத்திய பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக குரேஷி நியமிக்கப்படுகிறார்.
மீண்டும் குரேஷிக்கு தண்ணி காட்டுகிறார்கள்…. மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் இருந்து திரிபுரா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகிறார். அதாவது 50 க்கும் மேற்பட்ட நீதிபதிகளுக்கு தலைமைப்பொறுப்பில் இருந்து பணி செய்தவருக்கு வெறும் நான்கு நீதிபதிகள் கொண்ட திரிபுரா நீதிமன்றம் வழங்கப்படுகிறது.
2020 ல் உச்சநீதிமன்ற நீதிபதியாக வரவேண்டியவர் பெயரை நீக்கி தூக்கியடிக்கப்பட்டிருக்கிறார் குரேஷி…
குரேஷி மிகவும் நேர்மையானவர், நீதியின் பக்கம் நிற்பவர், கடின உழைப்பாளி …. அவர் நீதிபதியாக இருந்த காலத்தில் வழக்குகள் தேங்காமல் பார்த்துக்கொள்வார்…. என்று சொல்கிறார்கள் நீதித்துறையை சேர்ந்தவர்கள்….
1976-ம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்திக்கு எதிராக தீர்ப்பு வழங்கினார் நீதிபதி எச்.ஆர். கண்ணா. 1977-ல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க வேண்டிய கண்ணாவை நிராகரித்து, அவருக்கு அடுத்த நிலையில் இருந்த எம்.எச்.பெக்கை நியமித்தார் இந்திரா.
இந்த தீர்ப்பு பற்றி தன்னுடைய புத்தகம் “Neither roses nor thorns” ல் கண்ணா சொல்கிறார். “இந்திரா காந்திக்கு எதிராக தீர்ப்பு கொடுத்தால் தலைமை நீதிபதி ஆக முடியாது என்று உங்களுக்கு தெரியாதா? என்று கண்ணாவின் சகோதரி கேட்டிருக்கிறார். “விளைவு பற்றி தெரிந்துதான் தீர்ப்பு கொடுத்தேன் என்று சகோதரியிடம் சொல்கிறார் கண்ணா…
அமித்ஷா மற்றும் மோடிக்கு எதிராக அன்று தீர்ப்பு கொடுத்த குரேஷியும் பின் விளைவுகள் பற்றி கவலைப்படாமலேதான் தீர்ப்பு கொடுத்திருப்பார்…
வாழ்க குரேஷி….