சந்தமாமா ஓவியர் சிவசங்கரன் காலமானார்
சந்தமாமா ஓவியர் சிவசங்கரன் காலமானார்
30 Sep 2020
சந்தமாமா சங்கர் என்றழைக்கப்படும் பிரபல ஓவியர் சிவசங்கரன் (97) வயது மூப்பு காரணமாக சென்னையில் நேற்று காலமானார்.
சென்னை போரூரில் உள்ள மகள் ராதா வீட்டில் வசித்து வந்தஅவர் வயது முதிர்வு காரணமாக நேற்று பகல் 1.40 மணிக்கு காலமானார். அவரது உடல் நெசப்பாக்கம் மயானத்தில் மாலை 5 மணிக்கு தகனம் செய்யப்பட்டதாக அவரது மருமகன் கார்த்திகேயன் தெரிவித்தார். மறைந்த சிவசங்கரனுக்கு 4 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
1924-ம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் பிறந்தவர் சிவசங்கரன். அவருக்கு 10 வயது இருக்கும்போது அவரது குடும்பம் சென்னைக்கு குடியேறியது. அதனால் சென்னையிலேயே படித்தார். மேல்நிலைப் பள்ளி படிப்பை முடித்ததும் ஓவியப் பள்ளியில் அதாவது தற்போதைய ஓவியக் கல்லூரியில் சேர்ந்தார்.
ஓவியப் படிப்பை முடித்ததும்கலைமகள் இதழில் பணியாற்றினார். 1951-ல் அம்புலிமாமா இதழில்ஓவியராக சேர்ந்தார். 14 மொழிகளில் வெளியான குழந்தைகளுக்கான அந்த இதழில் சிவசங்கரன் வரைந்த ஓவியங்கள் அவருக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்தன. இந்திய மக்களின் நினைவில் நிற்கும் வேதாளத்துக்கும், விக்ரமாதித்தனுக்கும் தனது ஓவியங்கள் மூலம் உயிரூட்டினார். ராமகிருஷ்ண விஜயம் இதழுக்கும் அவர் ஏராளமான ஓவியங்களை வரைந்துள்ளார்.