ஈகை பெருநாள் வாழ்த்துச்செய்தி..!
ஈகை பெருநாள் வாழ்த்துச்செய்தி..!
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், கோவை மாநகரத் தலைவர் பி.எஸ் உமர் ஃபாரூக் ரம்ஜான் வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார். அவர் தமது வாழ்த்துச் செய்தியில், ” புனித ரமலான் மாதம் 30 நாள் நோன்பு இருந்த முஸ்லிம்கள் பெருநாள் தினத்தை உலகம் முழுதும் ஈகைத் திருநாளாக கொண்டாடி மகிழ்கின்றனர்.
இல்லாதோருக்கு ஈந்து, அவர்களின் சிரிப்பில் இறை உவப்பைக் காண்பதால்தான் இந்நாள் ‘ஈதுல் ஃபித்ர்’ – ஈகைப் பெருநாள் என அழைக்கப்படுகிறது. உலக மக்கள் அனைவருக்கும் வழிகாட்டியாய் இந்த ரமளான் மாதத்தில் அருளப்பட்ட திருக்குர்ஆன் இறைவழிபாட்டை மட்டுமன்றி மனித சமூகத்தினை நன்னெறி படுத்துவதையும் மனிதர்களின் துயர் நீக்குவதையும் கட்டாய கடமையென கூறுகிறது.
இன்று கொரானா நோயின் அச்சத்தால் இறையில்லங்கள் பூட்டப்பட்டிருந்தாலும் மனித நேயத்தை நேசிப்பவர்களின் உதவும் உள்ளங்கள் அடைக்கப்படாமல் திறந்து கிடப்பது மகிழ்ச்சியை தருகிறது.
கருணையும்,அன்பையும்,ஈகையும் போற்றும் இந் நன்னாளில் சக மனிதர்களிடையே நல்லிணக்கம் சிறக்கவும் தேசமெங்கும் அமைதி பிறக்கவும் பிரார்த்திப்போம். சகோதரத்துவ எண்ணம் ஓங்கவும் பிரிவினை எண்ணம் நீங்கவும் இணைந்து பாடுபடுவோம்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் மனிதர்களின உயிர் காக்க அர்ப்பணிப்பு உணர்வுடன் போராடும் அனைத்து நல்லுலங்களையும் நினைவுகூர்ந்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் மனதார வாழ்த்துகிறோம்.
கோவிட் கால இடைவெளியை அன்பு கலந்த இதயங்களால் நிரப்புவோம்.
இந்தக் கொரோனா பேரிடரிலிருந்து நாம் விரைவில் மீண்டெழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்.
அனைவருக்கும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், கோவை கிளையின் சார்பில் இதயம் நிறைந்த ஈகைப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.