ஸபர் மாதம்
ஏன் அண்ணா? ஸபர் மாதம் பீடையாமே?
எல்லோரும் சொல்கின்றார்; உண்மைதானா?
வாணுலகும் மண்ணுலகும் போற்ற வாழ்ந்த
வள்ளல் நபி பெருமானார் இந்த மாதம்
நோய் கண்டு நலங்குன்றி யிருந்த தாலே
நோய் மாதம் என்று சிலர் சொல்லக் கேள்வி !
ஆதாரம் உள்ளதா? அண்ணா; கொஞ்சம்
அறிந்தெனக்குச் சொல்லுங்கள் என்றாள் தங்கை !
மாதத்தில் பீடையேதும் இல்லை யம்மா !
மனதில் தான் பீடையெனச் சொல்வேன்; எந்த
வேதத்தில் இருக்கிறது பீடையென்று
விவரிக்க முடியுமா…? விபரம் கேட்டேன் !
பேதமையால் இப்படித்தான் திசைகள் மாறி
பெருங்குழப்பமடைகின்றார்; மக்கள் எல்லாம் !
ஏது வழி என்ன விடை யென்றால்; இங்கே
இருக்கிறது நல்ல பதில் என்று சொல்வென் !
பகுத்தறிவுப் பாசறையாம் இஸ்லாம் மார்க்கம்
பாரினிலே தழைத்தோங்கும் இந்த நாளில்
புகுத்துகிறார் பித் அத்தை; சமுதாயத்தில்
புரியாதோர் பொய்வழியில் போகின்றாரே…!
நகம் வெட்டும் வகை கூட சொல்லி யிந்த
நாடாளும் திறமெல்லாம் நாவினிக்க
வகைவகையாய் சொல்லுகின்ற தீனுக்குள்ளே
வந்ததுதான் யெப்போது இந்த பித்அத் !
பெருமானார் திருமகனார் பாத்திமாவை
பெருவீரர் அலியார் மணந்ததிந்த
திருமாத ஸபரில்தான்; மறந்தாபோனாய்
செப்புவாய் ஸபரென்ன பீடைதானா…?
அருள்மாதம் ரபியுல் ஆகிர் தன்னில் (முஹியித்தீன்)
அப்துல் காதர் ஜீலானி வபாத் தானார் !
பெருமாத ஜமாஅதுல் ஆகிரிலே நம்
பேர் பெற்ற நாகூர் ஆண்டகை வபாத்து !
குறை மாதம் இதுவெனக் கொள்ளலாமா…?
குழப்பத்தில் ஏதேதோ பிதற்றலாமா…?
ரஜப் மாதம் ஹஜரத் காஜா முகியிதீன்
சிஸ்தியெனும் பெரியார் வபாத்தானார் !
அதற்காக அம்மாதம் பீடையென்றா
அர்த்தம் நாம் கொள்ளுவது? தவறே யன்றோ !
நாளெல்லாம் நன்னாளே நபிகள் சொன்னார் !
நல்லமலை வாழ்க்கையிலே நிறைக்கச் சொன்னார் !
திருமறையும் திருநபியும் காட்டி நிற்கும்
திருநெறிதான் வாழ்க்கை நெறி தெரிந்து கொள்வாய் !