ஶ்ரீ கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்

Vinkmag ad

ஶ்ரீ கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்
———————————-
வனத்தில் இரையின்றி
பசித்திருந்த
ஜரா எனும் வேடன்
பசியில் மதிமயங்கி
பார்த்த ஓர் உருவம்
பட்சி என நினைத்து
அச்சுப்பிசகாமல்
அம்பெய்தான்…

அதை தொடர்ந்து
ஆ என அலறியது
யாருமல்ல அது
ஶ்ரீகிருஷ்ணன்..

புனரபி ஜனனம்
புனரபி மரணம் என
புனித தத்துவத்தை
பூமிக்கு வழங்கிய
சாமி அவன்…..

தவறுக்கும் தவறான
தவறை செய்துவிட்டேன்
தறுதலையை
மன்னிக்க என
மடியில் கிடத்தி
மன்றாடி கெஞ்சினான்
வேடன் ஜரா…

பதட்டத்தை தனித்து
பசியாற பழங்களை
வேடனுக்கு கொடுத்து
கதையை விவரமாக
சந்ததிகளுக்குச்சொல் என்றார்
சரித்திர நாயகன்
ஶ்ரீ கிருஷ்ண பரமாத்மா…

அந்தகர்களின்
அரசன் உக்கிரசேனன்
அவனின் அன்புத்தம்பி தேவகன்
தேவகனின் செல்ல மகள்
தேவகி எனும் குலமகள்….

சூரர்களின் அரசர்
வசுதேவருக்கும்
தேவதை தேவகிக்கும்
மணமுடிக்க எண்ணி
மனப்பூர்வ தீர்மானம் ஏற்றி
மணவிழாவும் நிகழ்ந்தது….

உக்கிரசேனனின்
ஒரு மகன் கம்சன்
தேவகிக்கு அவன்
ஒன்று விட்ட அண்ணன்..

மறுவீடு செல்லும்
பாசமலர் தங்கை
தேவகியின் தேரை
தானே ஓட்டி
தன்பாசம் காட்ட நினைத்த
தன்னிகரில்லா மன்னன் …

“எட்டாவது பிள்ளை உன்
எமனாகப் போகிறது”
எங்கிருந்தோ வந்த குரல்
காதில் விழுகிறது கம்சனுக்கு

காதில் நுழைந்த குரல்
கருத்தினில் நுழைந்து
கள்ளம் கபடமற்ற
கம்சன் என்பவன்
கசாப்பு கடைகாரனாகிறான்…

மதுரா நகரில் தோன்றிய
மழலைச் செல்வங்களை
மனதில் இரக்கமின்றி
வெறித்தனமாக
வெட்டிச்சாய்க்கிறான்
மனிதன் என்ற நிலையிலிருந்து
எட்டி நிற்கிறான்…

வசு தேவர் தேவகி
தம்பதியருக்கு
எட்டாவது பிள்ளையாக
மதுரா நகரின்
சிறையில் பூத்த சின்னமலர்
ஶ்ரீ கிருஷ்ணர் …

கண்ட சிசுக்களை
கணநேரம் யோசிக்காமல்
கொலை செய்யும்
கொலைகாரன்
கம்சனிடமிருந்து
காப்பாற்ற எத்தனித்து
சிசுமாற்றம் அங்கு
சிறப்பாக நடந்தது ..

மதுரா நகரின்
மாணிக்கம் கண்ணன்
நந்த கோபர் யசோதையிடம்
ஆயர்பாடி சென்றது
அவர்களின் பெண்பிள்ளை
மதுரா நகர்
சமத்தாக வந்தது
சந்தேகம் வரவில்லை கம்சனுக்கு…

ஆயர்பாடியில் கண்ணன்
அழகாக வளர்ந்தான்
அடுக்கு பானைகளில்
அமுதென இருந்த
வெண்ணையை
திருடி திண்ணும் அவன்
தீராத விளையாட்டுப்பிள்ளை..

அவன்பால்
அனைத்து பெண்களும்
ப்ரீதி கொண்டிருந்தனர்
யக்ஞ படையல்
இறைவனுக்கா?
இந்த கிருஷ்ணனுக்கா?
என்றால் கிருஷ்ணென்பது
எல்லா பெண்களின் பதில்

அவன் குழலோசையில்
ராதை மட்டுமல்ல
பிருந்தாவனமே
பித்துக்கொண்டிருந்தது…

வாசனை அடங்கிய
திரவியங்கள் விற்கும்
திரிவக்ரா எனும்
மூன்றிட கூன் பெண்ணின்
முதுகை தொட்டார்

மான் போன
மாயமென்ன என்பது போல
கூன் மாயமானது
மாயக்கார கண்ணனானார்….

விருஷ்ணி குலத்தலைவர்
கம்சனின் மைத்துனர்
அமைச்சரவையில் அமைச்சர்
அக்ரூர்ரை அனுப்பி
அழகாக வஞ்சம் தீர்க்க
தனூர் பூஜைக்கு
தந்திரமாக அழைத்து

கண்ணனை கொலை செய்ய
கருதி முடிவெடுத்த
கருணையற்ற மாமன்
கம்சனை அண்ணன்
பலராமனின்
பலத்தையும் சேர்த்து
அழித்து ஒழித்து
மதுராபுரியை
தாய்வழி தாத்தா
உக்கிரசேனரிடம்
ஒப்படைத்தார்
ஒப்பில்லாத ஶ்ரீகண்ணன்….

தன் இருமகளையும்
கம்சனுக்கு கட்டிகொடுத்த
பிறக்கும்போதே
பாதி பேயாகவும்
பாதி முனியாகவும் பிறந்த

மகள் அல்ல
மகள்கள் தாலி அறுத்ததை
மனதில் பொறுக்காத
மகத தேச மன்னன்
ஜராசந்தன்
கண்ணனை அழிக்க
கணை தொடுத்தான்

பூர்வ குடிகளின்
புதுமையான ஆயுதத்தால்
ப்ரவர்ஷன குன்றில்
ஜராசந்தனை
வென்றான் கண்ணன்

விதர்ப தேச அரசன்
பீஷ்மகனின் மகள் ருக்மிணி
சிசுபாலனை
மணக்க மறுத்து
சிவன் கோயிலில் மறைந்தவள்
ஶ்ரீகிருஷ்ணனை மணந்தாள்…

கேட்டதும் கொடுப்பவன்
கீதையின் நாயகன்
பகவான் விஷ்ணுவின்
எட்டாவது அவதாரமான
ஶ்ரீ கிருஷ்ணன் அவதரித்த
இந்நாளில் அனைவருக்கும்
ஶ்ரீ கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்
பா.திருநாகலிங்க பாண்டியன்

மதுரை

News

Read Previous

வாராது வந்த மணி

Read Next

நான் யார்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *