வெந்தனலில் விளையாடும் கந்துவட்டி!

Vinkmag ad

வெந்தனலில் விளையாடும் கந்துவட்டி!

(டாக்டர் ஏ.பீ .முகமது அலி,ஐ.பீ.எஸ் (ஓ)

 

வெந்தனல்  சாக்காட்டில் விளையாடும்

தோள் எங்கள் வெற்றித் தோள்கள்

போர்முரசு கொட்டிய

சங்கத்தமிழன்!

 

வடமொழி இந்தித்திணிப்பை  -65ல்

எதிர் கொண்ட தமிழக இளைஞர்

வியட்நாமியருக்கு சளைத்தவர் இல்லை

என எடுத்துக் காட்டி

 

அக்கினி  ப்பிழம்பினை

மாலையாக மார்பினில் அணைத்து

செத்து மடிந்தனர் சிவலிங்கம்

சின்னசாமி போன்றோர்

 

அவர்கள் தியாகம் வீண்

போகவில்லை-இந்தித்

திணிப்பு தடுத்து

நிறுத்தப் பட்டது ஓர் வரலாறு!

 

‘கூலியுயர்வு கேட்டான் அத்தான்

குண்டடி பட்டு செத்தான் அத்தான்’-என

குரல் கொடுத்து -67ல் கோட்டையைப்

பிடித்தார் அறிஞர் அண்ணா

 

கூலியுயர்வு கேட்டதிற்காக

கீழ்வெண்மணி  44

விவசாயத் தொழிலாளர்கள்

வெந்தனலில் வேகவிட்டனர் -68ல்

 

‘வேல் கொண்டு இதயம் பாய்ச்சிய’

செய்தி என்று வேதனைப் பட்டார்-அண்ணா

விடிவு- நில உச்ச வரம்பு, உழுவனுக்கே

நில உரிமைச் சட்டம் விடியலானது!

 

இங்கிலாந்து எழுத்தாளர் ஷேக்ஸ்பியர்

எழுதிய,’மெர்ச்சண்ட் ஆப் வெனீஸ்’ -என்ற

நாடகத்தில் ‘சைலாக்கின்’ கந்துவட்டி

காவியம்  அறியாதோர் உண்டோ!

 

கந்துவட்டி  தடைச் சட்டம் பல வண்ணத்தில் வந்தாலும்

காளான் போல அத்தைக்கு மீசை

முளைத்து  துளிர் விட்டதோ-என்று

நெல்லை சம்பவம் நினைக்கத் தோன்ற வில்லையா!

 

வாங்கிய கடனை அடைக்க நெல்லையை விட்டு

கோவைக்கு வேலைதேடி சென்றாலும்

விடுவதாக இல்லையே  கந்துவட்டி

கலங்கினான் இசக்கிமுத்து!

 

கந்துவட்டியர், காவல்துறையினர் மறுபுறம்

கோர பிடியினை நெருக்கையிலே-மதுரை

பாண்டிய மன்னர் சபையில் கண்ணகி நீதிகேட்டது போல

நெல்லைக் கலைக்டர் அலுவலகம் வந்தான் நீதி கேட்க

 

ஏழைக்கு அவ்வளவு சீக்கிரத்தில் அனுமதி கிடைக்குமா

அந்தப் புற கலைக்டரை சந்திக்க காத்திருந்தான் இசக்கிமுத்து

அலறியது கைபேசி-கடும் குரல் எழுப்பிபேசியவர்

காவல் அதிகாரி கந்துவட்டிக்காரருக்கு ஆதரவாக

 

ஏழையின் குரல் எங்கே ஒலிக்கப் போகின்றது

போக்கற்றவனுக்கு புகலிடம் ‘கிருஷ்னா’ ஆயில் தான்

ரேஷன் கார்டுக்கு கிடைக்காத மண்ணெண்ணெய்

இசக்கிமுத்துவின் குடும்ப உயிரை பறிக்க உதவியது!

 

தீயின் கோர பிடியில் நான்கு உயிர்கள் பலர் முன்னிலையில்

கருகியபோது-கருணை உள்ளங்கள் கையில் கிடைத்ததை வைத்து

அணைக்க முற்பட்டனர்-ஆனால் கையில் கேமராவுடன்

படம் பிடித்தனர் பரபரப்பு செய்திபோட பத்திரிக்கையாளர்!

 

கண்டன குரல்கள் வந்தாலும் ‘பத்திரிக்கை தர்மம்’ என்றனர்

கல்நெஞ்சையும் கரைக்கும் சம்பவம் கருகிய நிகழ்வு

தங்கள் வீட்டில் நடந்தால் படம் பிடிப்பார்களா-என்று

கேள்விக் கணை எழுப்பாதோர் இல்லையென்றே சொல்லலாம்.

 

2010ம் ஆண்டு இதே நெல்லையில் அமைச்சர் பெருமக்கள்

பவனி வர சீருடை பாதுகாப்புப் பணியில் இருந்த

உதவி ஆய்வாளர் நடு ரோட்டில் வெட்டி சாய்த்தபோது

நாவறண்டு தண்ணீர் கேட்டவனுக்கு-எட்டி நின்று

 

தண்ணீர் வாயிலில் ஊற்றிய மந்திரி பாதுகாவலனைக்

கண்டு வெகுண்டனர்-மக்கள்

அருகில் இருந்த மந்திரிகள், மாவட்ட ஆட்சியர்

கார்களில் காயம்பட்டவரை மருத்துவ மனைக்கு

 

அனுப்பாமல்-காத்திருந்தனர் ஒருமணி நேரம் அவசர ஊர்திக்காக

கொடுங்காயம் பட்ட உயிர் காப்பாற்ற முடிந்ததா இல்லையே

அடுத்த வருடம் மந்திரி பதவியும் பறிபோனது

அதனையும் படம் பிடித்தனர் பத்திரிக்கையாளர்.

 

இசக்கிமுத்து குடும்ப சாவிற்கு காவல்துறையும்

கலெக்டரும் பல காரணங்கள் சொன்னாலும்

வழக்கமான சாக்குப் போக்குத் தான் என

அறியாதவர்களா மக்கள்!

 

வரதட்சணை சாவுகள் இருந்தாலும்

தீப்பற்றிய பெண் தனக்குத் தானே

வைத்துக் கொண்டது என்று

சொல்லாத மாமியார் இல்லையா!

 

அதே போன்றுதான் ஆதிக்க சக்தியின்

சப்பைக் கட்டும் -சட்டம்

இனியும் ஒரு இருட்டறையா

எனி கேட்காதோர் உண்டா!

 

இசக்கிமுத்துவிற்கு ஏற்பட்ட கொடுமை போன்று

இச்சமுதாயத்திற்கு ஏற்பட்டுவிடக் கூடாதென்று

1400 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணலார் நபியவர்கள்

வட்டி இணைவைப்பதினைவிட பாவமானது என்கிறார்கள்

 

ஆனாலும் அந்த புரையோடிய பழக்கம் இன்னும்

நமது சமுதாயத்திலும் இருக்கின்றது என்று

2014ல் உயர் நீதிமன்றத்தில் இரு முஸ்லிம்

வியாபாரிகளிடையே நடந்தது வியப்புத் தானே!

 

ஒரு காலத்தில் பள்ளப்பட்டி என்றாலே

வட்டித் தொழிலுக்கு பேர் போனது என்பர்

அந்த பழிச் நீக்கி வட்டியினை ஒழித்த ஊர்

பள்ளப்பட்டி என்று இன்று விலங்க வில்லையா !

 

அதேபோன்று தான் இளையான்குடி-புதூர்

வியாபார பெருமக்கள் ஒரு காலத்தின்

வட்டித் தொழில் வழக்கத்தினை -மாற்றி

வட்டியில்லா ஊர் என்ற பதாகை காணலாம் இன்று!

 

கந்து வட்டித் தொழிலை சட்டங்கள் கொண்டு

ஒழிக்கும் முயற்சி ஒருவேளை தோற்றுப் போகலாம்-ஆனால்

சமுதாய மக்கள் நினைத்தால் அரவே ஒழித்து விடலாம்

என்ற எடுத்துக் காட்டு பள்ளபட்டியும்-புதூரும் எடுத்துக்காட்டு!

 

ஒன்று படுவோம்  வென்று காட்டுவோம்

கந்து வட்டிக் கொடுமை அறுத்தெறிவோம்

வரதட்சணைப்  பேயினை

முறம் கொண்டு விரட்டிடுவோமே!

 

News

Read Previous

அறிவியல் என்றால் என்ன?

Read Next

திருமண வாழ்வை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *