வினவுப்பாட்டு
===================
ஊர்ப்பழமைகளைப் பேச
அதையொருவன் பகடிசெய்ய
பகடிசெய்தவனைப் பார்த்து
வினவுப்பாட்டு படிக்கிறான்
ஒரு
நாட்டுப்புறத்து நாடோடி!!
===================
வை ராஜா வை!
ஒண்ணுக்கு நாலு
ரெண்டுக்கு எட்டு
வை ராஜா வை!!
அந்த
கணீர் குரலுக்கு
மதி மயங்கி
காசு வைத்து
கல்பனா
தியேட்டரடியில்
வாய்பிளந்து
நீ
நின்றாயா இல்லையா?
ஒன்றுக்கு இரண்டுமுறை
யோசித்து விட்டு
சொல்லு இராஜா சொல்லு
திருமூர்த்தி மலை
போகிறேனென்று சொல்லி
அம்மாவிடம் காசுவாங்கி
பஞ்சலிங்கம் போகும்வழி
மரத்தடியில் மறைந்துநின்று
அந்த மூணு சீட்டுக்காரனிடம்
பணமெல்லாம் பறிகொடுத்து
நீ
நின்றாயா இல்லையா??
ஒன்றுக்கு இரண்டுமுறை
யோசித்து விட்டு
சொல்லு இராஜா சொல்லு
மாரியம்மன் கோயலிலே
பராக் பார்க்கவேண்டிப்
பாட்டனிடம் பணம் வாங்கி
காந்திசவுக் பாய்கடையில்
துவால்த்துணி நாலுவாங்கி
அத்தனையையும்
ராட்டினந்தூரி ஆடும்
பெண்டுகளிடம் தொலைத்துவிட்டு
நீ
நின்றாயா இல்லையா??
ஒன்றுக்கு இரண்டுமுறை
யோசித்து விட்டு
சொல்லு இராஜா சொல்லு
சந்தைப்பேட்டைத் திடல்
மொக்கில்
லைன்குண்டு விளையாடுகையில்
வெதர் சொல்லியடித்துக் குழியிறக்கியும்
காசுகுடுக்காத கோயிந்தனிடம்
மண்டை உடைபட்டு
நீ
நின்றாயா இல்லையா??
ஒன்றுக்கு இரண்டுமுறை
யோசித்து விட்டு
சொல்லு இராஜா சொல்லு
-பழமைபேசி.
Tags: வினவுப்பாட்டு