வாழ்க எம் தாயே.. தமிழே!..
வாழ்க எம் தாயே.. தமிழே!..
ஆறென ஆறு காவிரியாறு
ஊர் என ஊரு தஞ்சா ஊரு
பேர் எனப் பேரு சோழர் நாடு
சோறென சோறு நெல்லுச் சோறு..
பாயென பாயும் காளை மாடு
பருப்பென நெய்யும் அறு சுவையோடு
உண்ணும் உறங்கும் செந்தமிழ் நாடு
உயர நிற்கும் பல்கலை யோடு!.
கூடெனக் கூடும் மதுரைக் கூடல்
கூவெனக் கூவும் இறை நெறிக் காவல்
பாட்டென பாடும் சங்கப் பாடல்
பாண்டியர் ஆளும் அரசுயெம் ஆவல்!
காடும் மலையும் உடு உடு ஓட்டம்
காணும் பக்கங்கள் கடலலை ஆட்டம்
சேரச் சேர சேர்ந்தது நாடு
சேரர் கொடியில் வில்லது பாடு!
கிழக்கும் மேற்கும் கடலது நிற்க
தெற்கில் எம் தாய்கன்னியும் நிற்க
வடக்கில் வேங்கடம் மலை அது தாண்டி
வழங்கும் தமிழே நீ நின்று வாழி!..
பொற்க்குடம் வைத்த தேன்அது தமிழே..
பொய்யில் வேந்தர் ஆட்சியின் முறையே..
ஔவையும் இங்கே அரசருக்கும் இணையே
ஆத்திச் சூடிய இறை எம் தலையே!
ஊரது விட்டு ஊரது தேடும்
உயர்வான் நிலவும் கதிரும் போலே
நாடுகள் தாண்டி நாங்கள் நிலைத்தோம்
நலம் தான் யாருக்கும் எங்கள் உறவே!
கற்றது உயர்வாய் கலந்தது உணர்வாய்
ஏற்பது போலே எங்கள் உறவே
பூவது பூக்கும் புன்னகை போலே
புரிவோம் உழைப்பால் உயர்வும் நிலைப்பாய்..
நிலம் எங்கும் எங்கள் நிலைத்த புகழே
நெடுவரை தொட்ட மலைஉயர் திருவே
கலந்தது போலே நட்பது தொடர
காலம் வாழ்த்த வாழ்க எம்தாயே!..
பாவலர் மு இராமச்சந்திரன் தலைவர்.
தமிழ்த் தன்னுரிமை இயக்கம்.