வாக்காளர் கடமை
வாக்காளர் கடமை
காலில் விழுந்து பிழைப்பை நடத்துவோர்
காலை வாரிப் பிழைப்பை நடத்துவோர்
குற்ற வழியில் பிழைப்பை நடத்துவோர்
குற்றம் சொல்லியே பிழைப்பை நடத்துவோர் ..
பழம்பெருமை பேசிப் பிழைப்பை நடத்துவோர் .
பழயதைக் கிண்டியே பிழைப்பை நடத்துவோர்.
குட்டையைக் குழப்பி பிழைப்பை நடத்துவோர்
குறுக்கு வழியில் பிழைப்பை நடத்துவோர் .
கூட்டணி சேர்ந்து பிழைப்பை நடத்துவோர் .
கூட்டணி உடைத்து பிழைப்பை நடத்துவோர் .
கொள்கை என்று உரைப்பார் ஒருநாள்
கொள்கை தன்னைத் துறப்பார் மறுநாள்
கொள்கை ஒன்றே இவர்களுக்கெல்லாம்
கொள்ளை அடிப்பது மக்கள் பணத்தை ..
இலவசம் கொடுத்து இசைந்திடச் செய்வார்
பல வேஷம் போட்டு பல்லை இளிப்பார் .
நோட்டுகள் கொடுத்து ஓட்டுக்கள் வாங்கி
போட்ட பணத்தைப் பெருக்கிடச் செய்வார் .
சான்றிதழ் வழங்கிட லஞ்சம் பெறுவார்
சாலைகள் போடக் கமிஷன் பெறுவார் .
வேலைக்கமர்த்த , வேற்றிடம் மாற்றிட
நடவடிக்கைகள் எடுக்காதிருக்க
விசாரணைகள் நீர்த்துப் போக
எல்லாவற்றிற்கும் விலையொன்றுண்டு .
வீடு கட்ட செங்கல் குவித்தால்
வார்டு மெம்பெருக்கு கப்பம் வேண்டும்.
திட்ட அனுமதிக்கு லஞ்சம் உண்டு .
தண்ணீர் இணைப்புக்கு லஞ்சம் உண்டு
மின் இணைப்புக்கும் லஞ்சம் உண்டு .
லஞ்சம் கொடுக்க மறுத்துவிட்டால்
வீடும் கட்ட முடியாது -இவர்களுக்கு
ஈடும் கட்ட முடியாது .
காவல் துறை இவர்கள் ஏவல் துறையாம் .
நீதித்துறையோ நெடிய பயணம் .
ஜனங்களை நாயாய் அகத்தில் நினைப்பதே
ஜன நாயகம் என்று ஆனது காணீர் .
சாதி ,இனம், மொழி , மதபேதமின்றி
நீதி வழி நிற்கும் நல்லவர்களை
தேர்தலில் ஒட்டுக்குப் பணம் வாங்காமல்
தேர்ந்தெடுக்கும் மன நிலை ஒன்றே -நாம்
தேர்ந்தெடுக்க வேண்டிய வழியாகும் – கற்றுத்
தேர்ந்திடுவோம் இந்த படிப்பினையை .
சேது சுப்ரமணியம்.