வஹியாய் வந்த வசந்தம்

Vinkmag ad

( கவிஞர் மு ஹிதாயத்துல்லாஹ் )

 

வானவர் கோன் ஜிப்ரீல் (அலை)

வந்துரைக்க வஹியாக

தேன்மறையைப் பெற்றவரே !

தீரர் நபி நாயகமே !

 

சஞ்சலங்கள் பல சூழ்ந்தும்

சாபமிடாச் சந்தனமே !

நெஞ்சொளிரும் மாமணியே !

நேச நபி நாயகமே !

 

பல்லிளித்துக் கையேந்தும்

பழக்கத்தை விட்டொழித்துக்

கல்லுடைத்தும் கூழ் குடிக்க

கற்பித்த நாயகமே !

 

நிலுவையிலும் அளவையிலும்

நேர்மையினைக் கையாளல்

உயர்ந்ததென நவின்றிட்ட

உத்தமரே ! நாயகமே !

 

சொல்லோடு நில்லாமல்

சொன்னதையே செய்து உவந்த

நல்லார் நபிமணியே !

நட்புறவே நாயகமே !

 

வியர்வை உலருமுன்னே

வேலைக்குக் கூலி தரல்

சிறந்த பண்பென்று

செப்பிய நல் நாயகமே !

 

செல்வத்தைப் பெருக்குதற்கு

செய் தொழிலில் தவறிழைப்போர்

அல்லாஹ்வின் அருள் இழப்பார்

என்றுரைத்த நாயகமே !

 

மறை கற்று மற்றவர்க்கு

மனம் மகிழக் கற்பிப்போர்

இறையன்புக்குரியரென

இனிதுரைத்த நாயகமே !

 

ஈச்சமரக் கட்டிலிலே

இருந்தபடி நல்லாட்சி

மாட்சியுடன் செய்து வந்த

மாநபியே ! நாயகமே !

News

Read Previous

உள்ளத்தின் உணர்வுகளை எழுதுங்கள்

Read Next

உறவுப் பாலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *