ராசி இல்லா ராசாக்கள் ?
முதுவைக் கவிஞர் ஹாஜி அ. உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ –
நானொரு நாடு விட்டு நாடு வந்த சபுராளி !
நல்லதொரு நாடுதனைத் தேடிவந்த தொழிலாள் !
தேனான தீன்மொழியும் தெய்வீக வாசனையும் !
தினஞ்சுற்றி வந்தாலும் துடிக்கிறது என் மனது !
ஊரெல்லாம் ஊரை விட்டு உலகெல்லாம் ஓடுகிறார் …………
உனக்கென்ன கேடு’ யென என் வீட்டில் போராட்டம் !
காரென்ன ? காடென்ன ? வீடு தோட்டம் இருந்தென்ன ?
கடல் தாண்டிப் போவது தான் பலபேர்க்கு கொண்டாட்டம் ?
பசியின்றி வாழ்ந்தாலும் பகட்டாக அணிந்தாலும்
போதாது ! வீடு கூட்டும் விலக்குமாறும் வெளிநாட்டில்
குஷியாக வர வேண்டும் ! குனியாமல் கூட்ட வேண்டும் !
குணங்கெட்ட மாதருக்குக் குறையாத பொருள் வேண்டும் !
வெளிநாட்டில் அல்லல்படும் அவலங்கள் ஆயிரங்கள் !
விதவிதமாய்க் கண்டாலும் கேட்டாலும் கவலையில்லை !
சிலவாண்டு சென்று வந்தால் செல்வந்தர் ஆகிடலாம்
சீக்கிரமாய்ப் புறப்படுங்கள் என்றார்கள் இல்லத்தார் !
பொருள்விற்றுப் பொன்விற்றுப் புறப்பட்டேன் வெளிநாடு !
பணங்காசு கட்டாக அனுப்புகிற கனவோடு !
அருள்சூழும் ஆசையிலே இருள்சூழ ஆகி விட்டேன்
அவலநிலை அத்தனையின் குழியினிலே வீழ்ந்துவிட்டேன் !
சொன்னபடி உழைப்பில்லை ! சம்பளமோ போதவில்லை !
சொகுசான வாழ்க்கையென எண்ணியதில் உண்மையில்லை !
எண்ணியது வேரொன்று இருப்பதுவோ மற்றொன்று !
என்செய்வேன் இங்கிருந்து ? யாரிடத்தில் நான் சொல்வேன் !
உழைத்து விட்டு உண்பதற்கு உணவெடுத்து உட்கார்ந்தால்
வரிசையென வருகிறது மனைவிமுகம் மக்கள் முகம் !
களைப்புதனைத் தீர்ப்பதற்கு படுக்கையிலே போய் விழுந்தால்
கண்ணிறைந்து நிற்கிறது உறவுகளும் நட்புகளும் !
தொலைபேசி ஒலியினிலே என்மகளின் பிஞ்சுமொழி !
தொடராக ஒலிக்கிறது என்மனைவி கொஞ்சுமொழி !
அலைபேசி அழைப்பினினே என் அன்னை நெஞ்சமொழி !
அனைவரையும் நான்காண என்ன வழி ? என்ன வழி ?
நடுநிசியில் துயிலெழுந்தால் மறுபடியும் தூக்கமில்லை !
நோய்வந்து பாய்படுத்தால் ஏனென்க நாதியில்லை !
‘சுடும் நினைவு’ அலைகளினால் மனதினிலே அமைதியில்லை !
சுகமென்ற சொல்லுக்கு ஏதுமில்லை ! ஏதுமில்லை !
மனைவிக்கு நோயென்றால் மனம்கிடந்து துடிக்கிறது !
மக்களுக்கு நோயென்றால் மனம்வெதும்பிச் சாகிறது !
தனிமைக்குள் சிறைவைத்த துயரத்தால் அழுகின்றோம் !
தீயிட்டப் புழுப்போலத் துடிக்கின்றோம் ! துவழ்கின்றோம் !
இறப்பென்ற செய்திவந்தால் தனிமையிலே அழுகின்றோம் !
பிறப்பென்ற செய்திவந்தால் தனியாகச் சிரிக்கின்றோம் !
மறைப்பதற்கு ஒன்றுமில்லை ! மாயைதான் இவ்வாழ்க்கை !
உடலுக்கும் உயிருக்கும் ஒட்டில்லாப் பொய்வாழ்க்கை !
கனவுகளும், நினைவுகளும் இதயத்தை வாட்டிடுதே !
காண்கின்ற பக்கமெலாம் எனைப் பார்த்துச் சிரிக்கிறதே !
மனவாசை கொண்டலையும் என்போன்றான் ஆசையிலே
மண்விழுந்து – பிறந்திட்ட மண்ணோக்கிச் செல்கிறதே !
ஆயிரமாய் அனுப்பினாலும் மறு செய்தி ‘கடன் செய்தி’ !
அத்தனைகளும் அனுபவித்தும் வரவில்லை சுபச்செய்தி !
மாயுமெங்கள் தொழிலாளர் மனதினிலே மகிழ்வில்லை !
மறு முடிவு செய்திடவும் உடனடியாய் வழியில்லை !
இரத்தத்தை வியர்வையென வடித்துவிட்டு ஒடிந்துவிட்டேன் !
இங்கு வந்து உணர்வுகளை வலிமைகளை இழந்துவிட்டேன் !
இருப்பதனை இழந்துவிட்டுப் பறப்பதனைப் பிடிக்கவந்தேன் !
இருசிறகும் ஒடிந்து விட்ட பறவையெனக் கிடந்து விட்டேன் !
உழைப்பதற்கு வழியிருந்தும் வெளிநாடு செல்வோர்க்கு
என்வாழ்வு ஒரு பாடம் ! இருக்கின்ற சிலகாலம்
பிழைக்கின்ற வழிதேடிப் பொருளீட்டிச் செல்லட்டும் !
பிறந்தமண் பூமியிலே பணங்காசை வெல்லட்டும் !
——-
அல்ஹம்து லில்லாஹ்.மிகவும் அருமையான எதார்த்தத்தை வெளிக்கொண்டு வரும் கவிதை.
இக்கவிதையை அயல் நாட்டினருக்காக அரும்பாடு பட்டு எழுதிய என் மதிப்பிற்குரிய
மாமு முதுவை கவிஞர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
வஸ்ஸலாம்
N.சய்யிது ஷம்சுத்தீன் சாதிக்
தேரிருவேலி
Syed Sadiq <shamsudeen79@gmail.com>
—————————
Yembal Thajammul Mohammad <newlightpdkt@gmail.com>
——————————–