ரமளான் – ஒரு பயிற்சிப் பட்டறை

Vinkmag ad

 

  • நோன்பே, நீ

எல்லாத் தீமைகளுக்கும்

எதிரான கேடயம்.

உன்னை அரியாதவர்க்கோ

புதிரான பொருள் !

  • புனிதர்களாக்கி, மானிடருக்குப்

புத்துணர்ச்சியும் அளிக்க

ஹிரா மலையிலிருந்து

கிளம்பிய அருவி நீ

  • இறையருள் மழையின்

ஈர்ப்பு விசை நீ

  • தீமையின் தேசங்களில்

ஷைத்தான்கள் எழுப்பும்

கோட்டைகளை மூழ்கடிக்கும்

கடல்கோள் நீ

  • அறத்திற்கு முரணானவற்றைத்

தடுத்து

ஆன்மீக அரணாகி நிற்கும்

அற்புதம் நீ !

  • இறைவனை

உடம்பால் வணங்கினோம்

உளத்தால் வணங்கினோம்

உரையால் வணங்கினோம்

உயிராலும் வணங்க வைத்த

உபதேசி  நீ

  • புலன்களின் போக்கை மற்றி

மானுடத்தைப்

புலப்படுத்தும் புரட்சி நீ

  • நீ எமது

பக்தியின் மணிமுடி;

அதனால்தான்

பொறுமையால் கோலோச்சும்

சிம்மாசனம் கிடைத்தது !

  • தடுக்கும் கேடயமாய் வந்து

கொடுக்கும்

தங்கத் தட்டாய் விடை பெறுகிறாய்

‘ரையான்’ எனும் சொர்க்கத்தின்

ஒரே திறவுகோல்

இன்று எம் கைகளில் !

  • ஈட்டி உவப்பதும்

ஈந்து உவப்பதும்

இரு வேறு நிலைகள்;

நீதான் அவற்றிற்கு

மலரும் மணமுமாய் ஆகும்

மாண்பளித்தாய் !

  • பற்றிருக்கப் பற்றறுத்து

பற்றுகொண்டு வெற்றி பெறும்

பாடம் படித்தவர்களுக்குப்

பயிற்சிப் பட்டறை நீ

  • நோன்பே !

முன்னொரு ரமளானின்

பத்ரு’ களத்தில் தொடங்கியது

எமது வெற்றி ஊர்வலம் !

இப்போது எமக்கு அது

காலங்கள் தோறும் தொடரும்

காவியம் …….

  • ரமளானே நீ

வரும்போதெல்லாம்

வரவேற்கிறோம், மகிழ்ந்து !

போகும்போதெல்லாம்

புழுங்குகின்றோம், நெகிழ்ந்து ….

  • ஈத்முபாரக்!’ சொல்லிச் செல்லும்

இனிய ரமளானே, நீ

சொன்ன சொல் தவறாமல்

அடுத்தடுத்த ஆண்டுகளிலும்

அருள் சுமந்து வா,

அலைகளைப்போல் ………

  • இப்படிக்கு

எதிர்பார்ப்புடனும் ஏக்கத்துடனும்

இறைநம்பிக்கையாளர்கள் ………..

–    ஏம்பல் தஜம்முல் முகம்மது

newlightpdkt@gmail.com

News

Read Previous

யான் படித்தப் பள்ளி; உயர்கின்றது மதிப்பை அள்ளி

Read Next

ஈத் பெருநாள் வாழ்த்துகள்​ !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *