யுகத்திற்கு ஒரு பாரதி
யுகத்திற்கு ஒரு பாரதி
☘
பாலூட்டிய தாய்க்கு நிகராய்
பாரதத் தாயை மதித்தவன்.
காலூன்ற நினைத்த வெள்ளையரை-எழுது
கோலாலே விரட்டி அடித்தவன்.
பாட்டுத் தீயாலே
பகைவரைச் சுட்டவன்-தன்
நாட்டு நலனுக்காய்
தன்னலம் விட்டவன்.
காட்டுத் தீப்போலே
கவிதைகள் வார்த்தவன்-தன்
கவிதை திறத்தாலே
நாட்டை மீட்டவன்.
சாதி பேதங்களை சாடி நின்றவன்-கவி
ஓதியோதியே
நீதி காத்தவன்.
பெண்ணடிமை பெருங்கொடுமை
என்று எதிர்த்தவன்-கவிப்
பேராற்றல் அதனாலே
அக்கொடுமை அழித்தவன்.
ஆசைக்கு மட்டுமே
மீசையை முறுக்கியவன்-தன்
அருங்கவியால் பல
ஆத்மாக்களை உருக்கியவன்.
மொழியும் நாடும்
விழிக்கு சமமென்றவன்-தன்
வழியும் வாழ்வும்
தமிழென்று உரைத்தவன்.
சகத்தில் இவன்போல்
கவிஞன் உண்டோ கூறு-நம்
அகத்தில் நிறைந்திட்ட
அருங்கவி இவன்பாரு.
யுகத்திற்கு ஒருவன்தான்
இவன்போல் பிறப்பான்-இவன்
முகத்திற்கு முன்னால்
யார்வந்து நிற்பார்.
நாட்டுக் குழைத்த கவியே-நின்
பாட்டுக்கு அடிமை இப்புவியே.
நோட்டுக்குப் பணியாத தமிழன்நீ-எவர்
பாட்டுக்கும் ஆடாத புலவன் நீ.
வீட்டுக்கு ஒருவன் உன்போலே
வித்தகத் தமி்ழ்காக்க வேண்டுமய்யா.
பாட்டுக்கு நீயே பாரதி-எம்
பைந்தமிழ்க்கு நீயே சாரதி.
கூட்டுக்குள் அடங்காத குருவிநீ-எழுது
கோலெடுத்தால் கவிகொட்டுவதில் அருவிநீ.
இப்பாட்டுக்குள் உன்புகழ் அடங்காது -அதை
எடுத்தியம்ப என்னாயுள் போதாது.
என்றும் பாரதி நினைவுடன்,
கவிஞர்.இரா.புனிதன்.✍
இன்று 11.12.2017 மகாகவி பாரதியின் பிறந்தநாள் கவிதை