மாற்றங்கள் வேண்டும்
மாற்றங்கள் வேண்டும்
மாற்றம் ஒன்றே மாறாதது என்றது போல்
மாற்றங்கள் நிகழவேண்டும் . – அந்த
மாற்றங்களால் மக்கள் வாழ்க்கை முறையினில்
ஏற்றங்கள் காண வேண்டும்.
அவரவர் நம்பிக்கை அவரவர் உரிமையெனும்
நிலை இங்கு நிலவ வேண்டும் – பிறர்
உரிமையில் தலையிடும் உலுத்தர்களை மக்கள்
ஊரை விட்டொதுக்கவேண்டும்.
வாக்குறுதிகள் தந்து , வாக்குகள் பெற்றோர்
வாக்குறுதி காக்க வேண்டும் – அவர்
வாக்குறுதி மறந்தால் மக்கள் அவர்களுக்கு
வா(ய் )க்கரிசி போட வேண்டும்.
பிறர் சொத்தை அபகரிக்கும் பேராசைக்காரர்கள்
பேரழிவு காண வேண்டும்.
அறவழி பிறழ்ந்து அக்கிரமம் செய்வோர்கள்
புறவழி ஓட வேண்டும் .
நீதி , நெறிகளை மதிக்காத நீசர்கள்
நிம்மதி இழக்க வேண்டும் .
மதங்களின் பெயரால் மக்களைப் பிரிப்போரின்
மத வெறி ஒழிய வேண்டும்.
சாதியின் பெயரால் சமத்துவத்தை அழிப்போரை
சந்தியில் நிறுத்த வேண்டும்.
மொழிவெறியைத் தூண்டி முன்னேற்றம் தடுப்போரின்
முகத்திரை கிழிய வேண்டும்.
தோலின் நிறம் கொண்டு துண்டாட நினைப்போரைத்
தூக்கிலே போட வேண்டும் .
கடமையைச் செய்யவே கையூட்டுப் பெறுவோரைக்
கடுகி தண்டிக்க வேண்டும்.
பணக்காரன் , ஏழையென பாகுபாடில்லாமல்
நீதித்துறை இயங்கவேண்டும்.
பாலியல் குற்றங்கள் செய்வோரின் வாழ்க்கையைப்
பாலைவனமாக்க வேண்டும்.
கலப்பட வாணிகம் செய்யும் கயவரைக்
கலங்கிடச் செய்ய வேண்டும் .
நாட்டுப்பற்றில்லாத நயவஞ்சகரை எல்லாம்
நாடு கடத்த வேண்டும்.
இயற்கை வளங்களை அழிக்கின்ற மாக்களை
இருட்சிறையில் வைக்க வேண்டும்.
நீதி வழங்கிடத் தாமதிக்கும் மன்றங்களை
நிர்மூலமாக்க வேண்டும்.
பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விழைப்போரை
சிரச்சேதம் செய்ய வேண்டும்.
மக்களால் ஏற்பட்ட, மக்களுக்கான அரசுகள் -இம்
மாற்றங்கள் செய்யவேண்டும்.-இந்த
மாற்றங்களால் மக்களும் , நாடும், உலகமும் -முன்
னேற்றங்கள் காணவேண்டும் .
சிலேடை ‘ சித்தர் சேது சுப்ரமணியம்
28.06.2021
Tags: மாற்றங்கள் வேண்டும்