மழை
– அத்தாவுல்லா –
காய்ந்த நிலங்களைக்
குத்திக் கிளறும்
ஊசி முனைகளாய்
உன் துளிகள் ! – அது
மண்ணைக் கிளறும்
மனங்கள் குளிரும் !
வந்து போன தேசங்கள் யாவும்
மண்வாசம் மணம் வீசும் !
வருவதற்கு முன்பே
தென்றல் குளிராய் பேசும் !
நீ
இந்த பூமிக்கு
உயிரூட்டும் உயிர்
உன்னால் செழிக்கும்
மானிடப் பயிர் !
நீ எழுகையில்
உலகம் எழும்
நீ – அழுகையில்
உலகம் சிரிக்கும் !
நீ வானத்தின் அழுகையா?
உலகத்தின் எழுகையா?
நீ ஓய்ந்தால்
எல்லாம் ஓயும்
பசிப்பிணியில்
வயிறுகள் காயும் !
நீயொழிந்தால் ஒடுங்கும்
உயிர்களின் நாவும்
கவிஞர்களின் பாவும் !
நீ
குளிர் வெப்பத்தின்
குதூகலக் கலவை !
இடியோசைகள்
உன் வருகைக்குக்
கட்டியங்கூறும் மேளதாளங்கள் !
வானவில்
சிவப்புக் கம்பளம் !
கறுப்பு மேகம் – உனைக்
கவுரவிக்கும் பொன்னாடை !
நீ வந்தால் ஏரோடும்
மக்களின்
நல்வாழ்வுத் தேரோடும்
இல்லையேல் போராடும் !
நீ கொடுத்தால் சிரிப்பு
கெடுத்தால் நெருப்பு !
நீ உலகை
வாழ்த்திப் பாடும்
வானத்துளிதான்
வரவில்லை என்றால் – வாழ்க்கையே
கண்ணீர்த்துளியல்லவா?
நீ அளவோடு வந்தால்தான் அழகு
இல்லையேல் ஆபத்து !
உன் பயணம்
வானுக்கும் பூமிக்குமல்ல
மக்களின்
மனதுக்கும் வயிறுக்கும் !
வயல்வெளிகளின்
பச்சைக் கம்பளப் புன்சிரிப்பே !
வாழுகின்ற காலமெல்லாம் வா !
வாழ வைக்க வா !
பொய்க்காமல் வா !
அருளாகப் பொருளாக வா !