மன வயல் செழிக்க வந்த மா மழை

Vinkmag ad

கவியரங்கக் கவிதை

கடந்த 01-03-2013 வெள்ளிக்கிழமை மாலை கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் தலைமையில் புளியங்குடியில் நடைபெற்ற மீலாது விழாக் கவியரங்கில் பாடிய கவிதையின் ஒரு பகுதி

மன வயல் செழிக்க வந்த மா மழை

(பி. எம். கமால், கடையநல்லூர் )

அந்தக் காலம் 
அந்தகக் காலம் 
கந்தக நெருப்பில் 
சந்தனம் வேக 
பந்தபா சங்கள் 
நொந்தழிந் தோட 
மனவயல் பரப்போ 
 மழையின்றி வாட 
தரிசாய் மனங்கள் 
தகித்துக் கிடந்தன !
 
உள்ள வயல்கள்
மட்டுமல்ல உலகத்தில் 
உள்ள  வயல்களும் 
உலர்ந்தே கிடந்தன !
 
உதய சூரியனை 
ஒதுக்கி வைத்துவிட்டு மக்கள் 
இருள்தே  வதையின் 
அருளை வேண்டி 
இருகை இலையை 
ஏந்தி நின்றனர் 
அவர்களுக்கு 
இலவசமாக 
கள்ளும் வாளும் 
கைகளில் கிடைத்தன !
அதனால் –
 
கொலைகற்  பழிப்புகள் 
கொள்ளைகள்  சூது 
அம்மா  நிலத்தில்
 அரங்கேறி நின்றன !
 
இன்றைய நாட்டுக் 
காட்டு மிராண்டிகள் 
அன்றைய அரபு 
நாட்டிலு மிருந்தனர்!
 
அவர்களின் 
பாவச் சூட்டால் 
பரவிய மனவயல் 
எங்கும் 
பயிர்களல்ல
சிலைகளே களைகளாய்
 முளைத்துக்  கிடந்தன !
உழவும் களவும் 
சாத்தா  னிடத்தில் !
மதுவே அங்கு 
மனவயல் பாசனம் !
 
அந்த வயல்களில் 
விவசாயம் அல்ல 
விபச்சாரம் தான் 
விளைபொரு ளானது !
 
இதய வானமோ 
இருண்டு கிடந்தது !
கார்மே  கத்தின் 
காரணத்  தாலல்ல 
கதிரவன் சிறையில் 
அடைபட் டிருந்ததால் !
 
திரிகளைத் தின்னும்
 சுடர்களை  போல 
பாவச் சுடர்கள் 
மனவயல் மேய்ந்தன !
 
காற்றுக்கு  வியர்த்தது 
கண்ணீரில் உப்புக் 
கரைந்து போயிருந்தது 
 
வரம் வேண்டித் தாவரங்கள் 
கிளைக்கர மேந்தி 
ஒற்றை வேர்களில்
 உபவாசம் இருந்தன !
பாலைவனம் சூரியனின் 
படுக்கையறை ஆனது 1
 
வாழ்க்கையின் உரமான பெண்கள் 
பூமிக்குள் உரமாகப் 
புதைக்கப் பட்டனர் !
 
அது ஒரு இறந்த காலம்
 அன்று 
ஏழை சிரிக்கவில்லை 
அதனால்
 இறைவனைக்காண 
எவராலும்  முடியவில்லை 
 
 
பாலைவனமும் 
பாழும் மனமும் 
நாளும் வறண்டு 
நாறிக் கிடந்தன 
 
கார்மே    கத்தின் 
கால்களி லெல்லாம் 
கண்ணீர்த் துளிகள் 
ஒட்டிக் கிடந்தன !
 
ஆறும் குளமும் 
ஆழியும் பாலையும் 
முன்நீரால் அல்ல 
பெண்களின்
 கண்ணீராலும் செந்நீராலும்
நிரம்பி வழிந்தன !
 கற்சிலை களுக்கு
s;அபி  ஷேகம் 
மனவயல் வெளிகளில்
கொலை வெறிப் பூக்கள் ! 
 
 
 
 
மண்ணின்  பயிர் செழிக்க 
மழைநீரே  உயிர்நீர் !
கண்ணீரோ ஆன்மாவைக் 
கழுவிச் சலவை செய்யும் 
 
பகலை வெளுப்பதற்குச் 
சூரியச் சவுக்காரம் 
இரவைச் சலவை செய்ய 
இரவிதான் ஆதாரம் !
இரண்டும் இருண்டு 
இருந்ததால் அங்கே 
உள்ளமும் இருட்டில் 
ஊறிக்  கிடந்தது !
 
 
உயிர்நீரு மில்லாமல் 
உள்ளத்துப் பயிர்வளர்க்க 
உதவும் அருள் மழையும் 
இல்லாமல் வாடிய 
இதயத்து நிலப்  பரப்பில் 
அல்லாஹ் அருளினான் 
ஆன்மாவில் தன; மழையை !
 
ஜிப்ரயீலின் சிறகுக்குள்ளிருந்து 
மின்னல் சிலிர்த்தது !
மனவயல் வெளியில் 
மடமட வென்று 
இடியின் குரலொன்று 
இப்படிக் கேட்டது :
அல்லாஹ் ஒருவன் 
அவன்தூதர் நான் என்று 
 
நல்லார் நபிகள் 
நாயகத்தின் திருநாவில் 
கலிமாவின் இடிமுழக்கம் 
கருணையுடன்  கேட்டது! 
 
அந்தக்  
குரல்மழை இறைவனின் 
அருள் மழையானது 
 
 மனவயல் பாசன 
மதுநதி எல்லாம்
அமுதம் நிறைந்த 
அருள் நதியானது !
மனவயல் எங்கும் 
மகசூல் பெருகியது !
 
ஒருநொடிப் பொழுதில் 
உலகம் சிலிர்த்தது !
சத்தியம் பொய்யைப் 
பார்த்துச் சிரித்தது !
 
ஆதம் நபிமுதல் 
ஈசா வரையில் 
மனவயல் வெளிகளில் 
மழை பொழிந்தது ; ஆனால் 
மனவயல் இன்னும் 
வெளுக்கப் படாமல்
அழுக்காய்  இருந்தது !
 
பேரிறை  இறைவனின் 
பேரொளித் துளியின் 
ஒருதுளி மழையால் 
உள்ளம் மட்டும் அல்ல; இந்த 
உலகும் வெளுத்தது !
 
 இபுலீசு கைகளில் 
இருந்த நிலத்தை எல்லாம் 
ஆன்மீகப்    பயிர் வளர்க்க 
 அபகரித்துக் கொண்டதினால் 
சிறைக்குப் போனார்கள் 
சீலம் மிகு சஹாபாக்கள் !
அல்லாஹ்வின்
 அருளின் சிறைக்கு
அனைவரும் போனார்கள் ! 
பொய் வழக்கு அவர்மீது 
போட வழி ஏதுமில்லை 
பொது எதிரியாக 
பொல்லாத இபுலீசு 
இருந்ததினால் !
 அல்லாஹ்வின்  அருள்மழை 
வெள்ளப் பிரளயத்தில் 
கஃபாச் சுவர்க் கடலில் 
கால்பதித்து நின்றிருந்த 
சிலைச்சீழ்க்  கட்டிகள் 
செத்து மிதந்தன !
 
வெந்த மனவயலில் 
வந்த நபிமழைதான் 
கந்தக மனவெளியை 
சந்தனவய லாக்கியது !
 
அந்த மழை இந்த
 அகிலத்தில்வர வில்லையென்றால் 
நாமெல்லாம் 
பாவப் பிரளயத்தில் 
பலியாகிச் செத்திருப்போம் !
 
அந்த மழையில்
கலிமாவின் கஸ்தூரி 
கமழ்ந்து கொண்டிருந்ததால் 
மன வயல்களெல்லாம்
மண  வயல்க   ளாயின !
 
மண்ணில் இறங்கிய
மழைமேகம் இன்னும் 
மதீனத்து மண்ணறையில் 
மௌனித்து இருக்கிறது !
 அந்த 
மண்ணறை thdj;J
 மழைமே கம்தான் 
உலகத்தில் மழையை 
உற்பத்தி செய்கிறது !
 அந்த மழைத் துளியில் 
ஆண்டவா ! நாங்கள் 
வெந்த மனம் ஈடேற 
விரைந்து நீ  அருள் புரிவாய் !
மழைமேக மாகவந்த
மன்னர்  இரசூல் நபியே !
 
 
யா ரசூலல்லாஹ் !
உங்கள்
பொன்மேனி கருகிடாமல்
பூமேனி வியர்த்திடாமல் 
 பூமிக்கு மேல் மேகம் 
குடை பிடித்த வரலாறைக் 
குறித்துவைத்  திருக்கின்றோம் 
இப்போது நீங்கள்
 எங்கள் முன் வந்து நின்றால் 
எங்கள் இதயங்களை அல்லவா 
குடையாக்கி இருப்போம் ?
 
 
 
 
 

News

Read Previous

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு ராமநாதபுரம் ஆட்சியர் யோசனை

Read Next

உயிர் குடிக்கும் உயர் இரத்த அழுத்தம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *