மகாகவி பாரதி வாழ்க மாதோ !
மகாகவி பாரதி வாழ்க மாதோ !
பாரதிகாவலர் டாக்டர் கே. ராமமூர்த்தி – துபாய்
சீர்மிகுந்த செந்தமிழின் சீராளர்;
செகம்புகழும் கவிதந்த பேராளர்;
கார்த்திகைத் தீபத்திங்கள் திருநாளில்,
கதிரெனவே அவதரித்தார் பாரதியார்.
நேர்த்தியுடன் பாநெய்த தறியாளர்;
நிலையறிந்து நூலிழைத்த குறியாளர்;
பாரதிசெவ் வாய்மலர, உருவான
பைந்தமிழ்ச் சொல்தங்கக் கருவூலம்.
கல்வியினால் காழ்ப்புதன் னிடமில்லாமல்
கவிக்குலத்து முன்னவரைப் படம்பிடித்தார்;
புல்முளைத்தே இருளடைந்த இந்நாட்டை,
பொலிவாக்கும் திருப்பணிக்கே வந்துதித்தார்.
முந்தையரின் புகழலையில் பொருந்தியதால்,
முகிழ்ந்தகடற் செல்வி ஆழம் இருந்தவாறே
சந்தமினிமை, முத்துப்பவளம் பாலித்தாள்;
தங்கக்கவி, தொடுத்ததனை மாலையிட்டார்.
பாவானம் பார்த்தறியா விடிவெள்ளி;
பாரதநாட்டு விடுதலையின் தீக்கொள்ளி;
மாகாளியம் மகாசக்தி, அருட்சக்தி,
மாகவியாய் வந்ததமிழ்ப் பெரும்சக்தி.
வளர்கின்ற பொற்காலம் தமிழனுக்கே
வாராதோஎன விசனிக்கின்ற பொழுதினிலே
களமிறங்கித் துறைதோறும் பாடிவைத்தார்;
காசினியில் மனிதநேயம் நாடிநின்றார்
புலர்காலைப் பொழுதுவரும் ஞாயிறுபோல்,
புரட்சிக்கே பாட்டாயுதப் பாயிரத்தால்
தளர்வின்றிச் சமூகவானில் சிறகடித்தே,
சமத்துவத்தைத் தாரணிகேட்க முரசடித்தார்
செந்தமிழ்ப் பாலதினில் மொய்ம்புறவே,
தேசபக்தி, தெய்வபக்தி நெய்யெடுத்தார்;
வந்தனைகள் புரிந்துநலம் சூழ்ந்திடவே,
வையமெலாம் பாரதிபுகழ் வாழ்கமாதோ !