போலிகள்
விளக்கினை ஏற்றிவிட்டு
.. விசிறியால் வீசுவாரோ
அழுக்கினை நீக்கிவிட்டு
.. அசுத்தமும் பூசுவாரோ?
தேசியம் பேசுகிறார்
.. திருடுகள் பண்ணுகிறார்
ஆசியும் கூறுகிறார்
.. அழிவையே எண்ணுகிறார்
வேலியே பயிரைத்தான்
.. வேகமாய் மேய்தற்போல்
போலிகள் இவர்கள்தாம்
.. போதனைச் சாயத்தில்
என்ன மனிதரிவர்?
.. எளியவர்க்கு நல்லவராம்
அன்னார் நடித்திடுவார்
.. அரசியலில் வல்லவராம்
ஓரங்க நாடகம்
..ஒவ்வாத பாத்திரம்
யாரங்குக் கேட்பது
…எல்லாமே சாத்திரம்
என்னென்ன ஒப்பனை
…எளியோரின் வேதனை
எண்ணாமற் போதனை
….எளிதாய்ப்பொய் விற்பனை
அரிதாரம் இவர்களின்
….ஆதாரம் ஆனது
புரியாத பதங்களே
…பூமாலை ஆனது
இல்லாத ஒத்திகை
..எழுதாத வசனம்
பொல்லாத செய்திகள்
..பொழுதானால் விசனம்
அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி
Tags: போலி