பொங்கல் வாழ்த்து
பொங்கல் வாழ்த்து
மண்
மணம்
கமழக் கமழ
விண்மழைக்கும்
கண்மழைக்கும்
வெண் சாமரம் வீச
மார்கழியின் மகளாய்
மாசிக்குத் தாயாய்
வந்துதித்த
தைமகளே…
உழவனின்
உழைப்புக்கு
கட்டியம் கூற
சிறுகோட்டுப்
பெரும் பழமாய்..
வருக!!! வருக!!
கடையெழு
வள்ளல்களின்
முன்னத்தி ஏரே
குடிமக்களின்
வரிப்பணத்தை
வாரியிறைக்காமல்
வியர்வையின்
வைரங்களை
வாரியிறைக்கும்
வள்ளல்களை
மகத்துவப் படுத்த
வருக வருக
தாழிட்ட
மண்கதவை
ஏர்கொண்டு உழுத
பாற்கடலை
பொங்க வைக்க
மழையாய் வருக
அறத்தை மட்டும் நம்பி
பொருளீட்ட
இன்பத்தைத் தொலைக்கும்
உழைப்பின் முகவரிக்கு
தனிமகனாய்
வருக வருக
ஆய்தம்
தாங்கிய
சமாதானத் தூதுவனுக்கு
அன்பின் முகவரியாய்
வருக வருக
அணிலாடு
முன்றில் வீட்டில்
குடியிருந்தாலும்
உணவு விருந்து தரும்
காக்கைப் பாடினியாரை
மலையனாராய்
மாற்ற வருக வருக
வியர்வையை
இறக்குமதி செய்து
உணவை
ஏற்றுமதி செய்யும்
உழைப்பின்
துறைமுகத்திற்கு
மகுடம் சூட்ட
வருக வருக
உழைத்த
கால்நடையை
உயிராய் மதிக்கும்
உத்தமனை நசுக்கும.
விவசாய சட்டங்களை
அழித்தொழிக்க வருக !
பழையதை
அழித்து
புதியதை தர
தை மகளே
வருக ! வருக!!
அகத்தை
புறத்தை
மனத்தை
தூய்மைப் படுத்த
வருக்!
ப. இப்ராஹிம்