பெற்றிட்ட சுதந்திரத்தைப் பேணியே காத்திடுவோம் !
பெற்றிட்ட சுதந்திரத்தைப் பேணியே காத்திடுவோம் !
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் …..அவுஸ்திரேலியா
உயிரிழந்தார் ஒருபக்கம் உடல்குறைந்தார் ஒருபக்கம்
உளமுடைந்தார் ஒருபக்கம் உறவிழந்தார் ஒருபக்கம்
தலைநிமிரப் பாடுபட்டார் தள்ளப்பட்டார் சிறைகளிலே
தலைமைநிலை கலங்காமல் தத்தெடுத்தார் அறமதனை
அசுரகுண மேலெழுத்து அழித்ததுவே பலபக்கம்
ஆத்மபலன் துணையெனவே நம்பினார் ஒருபக்கம்
அஹிம்சையினை ஆயுதமாய் ஆக்கினார் மறுபக்கம்
மண்காக்க புறப்பட்டார் மதங்கடந்து நின்றார்கள்
புண்பட்டார் குணமடைய பொசுக்கினார் சாதிகளை
தென்பட்ட இடமெங்கும் தேசநலன் மெனுமுணர்வு
தீப்பிளம்பாய் கிளர்ந்தெழுந்து செப்பியதே செய்தியினை
ஆண்டுநின்றார் கைக்கூலி யானவர்கள் ஒருபக்கம்
அடிமைநாய் களெனவுரைத்து ஆர்ப்பரித்தார் ஒருபக்கம்
வேண்டியதைச் சுருட்டிடுவார் உருவெடுத்தார் மறுபக்கம்
வென்றிடுவோம் எனுமொலியோ விண்ணோக்கி எழுந்ததுவே
காந்தியெனும் குரலங்கே காட்டியதே புதுவெளிச்சம்
கைகோர்த்தார் இந்தியர்கள் கயமையொழிந் தோடியதே
சாந்தியெனும் கொடிபறக்க சன்மார்க்க நெறிநின்று
காந்திமகான் வழிசென்று கண்டிட்டுடோம் சுதந்திரத்தை
பெற்றிட்ட சுதந்திரத்தைப் பேணியே காத்திடுவோம்
சுற்றமென எண்ணிநாம் சுதந்திரத்தைச் சுவைத்திடுவோம்
கற்றிட்ட அத்தனையும் கருத்திருத்தி செயற்படுவோம்
காந்தியெனும் பெயரதனை கண்ணியமாய் போற்றிடுவோம்