பூரண சுதந்திரம் யாருக்கு ?

Vinkmag ad

பூரண சுதந்திரம் யாருக்கு ?

 

சி. ஜெயபாரதன், கனடா

 

பாரதம் பெற்றது பாருக்குள்ளே

ஓரளவு சுதந்திரம் !

பூரண விடுதலை வேண்டிப்

போராடி னோம் !

பூமி இரண்டாய்ப் பிளந்தது !

பூகம்பம் நிற்காமல்

மும்மூர்த்தி  யானது

பங்களா தேசமாய் !

கட்டுப்பா டுள்ள சுதந்திரம்

கண்ணிய மானிடருக்கு !

கட்டவிழ்த் தோடும் சுதந்திரம்,

காட்டு மிராண்டி களுக்கு !

ராவணன் சீதையைத் தூக்கி

ரதத்தில் போவான் !

பூரண சுதந்திரம் அசுரப்

போர்க்களம் !

 

 பஞ்ச பாண்டவர்

பகடை ஆடுவர் சூதில்

பத்தினியைப் பணயம் வைத்து !

பட்டப் பகலில் பாஞ்சாலி

பட்டுச் சேலையைப்

பலர் முன்

பற்றி இழுப்பான்

துச்சாதனன் !

கண்ணன் குளிக்கும் மாதர்

புடவை

களவாடு வான் !

பூரண  சுதந்திரம் மாந்தர் புகும்

குருச்சேத்திரம் ! 

 

மசூதியை இரவில் தகர்த்து

வேரறுப்பது

பூரண சுதந்திரம் !

பாதிரியார் உடையில்

தீ வைப்பது

வேதியர் சுதந்திரம் !

ரயில் பெட்டிகளை எரித்துச்

சவப் பெட்டி ஆக்குவது

நவகாளிச் சுதந்திரம் !

பூரண சுதந்தி ரத்தில்

மதம் பிடித்த யானைகள்

மனித நேயத்தை மிதிக்கும்.

சுதந்திர நாட்டில்

மதக் கோலத் திருவிழா  

கும்ப மேளா !

 

எழுத்துச் சுதந்திரத்தில்  

ஒழுக்கம்கடமைகண்ணியம் !

விதிகளுக்கு அடங்கிய

நிதிச் சுதந்திரம் !

உரிமைத் தேர்ச்சி யில்லாத

வறுமைச் சுதந்திரம் !

கட்டவிழ்த் தோடும் முழுச் சுதந்திரம் !

பட்டு உதிரும் சுதந்திரம் !

ஒட்டு மாங்கனியாய்

நட்டு வைக்கும் சுதந்திரம் !

சுட்ட பழமா அல்லது

சுடாத பழமா 

எது சுதந்திரம் ?

எட்டித் தொட முடியா

பனிச் சிகரத்தில்

வேராய் மறைந் திருக்கும்

பூரண சுதந்திரம் 

சீரழிவுப் பாதை !

முழு விடுதலை பெற்றவர்

மோகன் தாஸ் காந்தி !

போதி மரத்தடியில்

பூரண விடுதலை வேண்டித்

தவம் புரிகிறார்

போலிச் சாமியார்

புதிய பூமிக்கு !

பூரண சுதந்திரம் வேண்டுமா ?​

ஓரளவு போதும் !

 

+++++++++++

News

Read Previous

மூவர்ண குறும்பாக்கள்

Read Next

பள்ளிவாசல்கள் எதற்காக?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *