பள்ளிவாசல்கள் எதற்காக?

Vinkmag ad

பள்ளிவாசல்கள் எதற்காக?

சிராஜுல் ஹஸன்

பள்ளிவாசலுக்கு எதிரில் இருந்தது தேநீர்க் கடை. முதலாளி கத்தினார். “கழுவ வேண்டிய பால் பாத்திரம் எல்லாம் அப்படியே கிடக்கு எங்கடா இந்த அன்வர் பயலைக் காணோம்?”

கிளாஸ் கழுவிக் கொண்டிருந்த பொடியன் ஒருவன், “அவன் பள்ளிவாசல்ல தூங்கிக்கிட்டிருக்கான் முதலாளி” என்றான்.

“தொழுகைக்குப் போடான்னா போறதே இல்லை. தூங்கறதுக்கு மட்டும் கரெக்டா பள்ளிவாசல் போயிடறான். அவன் வரட்டும் பேசிக்கிறேன்.” இன்றைய பள்ளிவாசல்கள் அதிகபட்சம் இரண்டு செயல்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. ஒன்று தொழுகைக்காக அல்லது தூங்குவதற்காக.

தொடக்க கால இஸ்லாமிய வரலாற்றை நாம் கொஞ்சம் புரட்டிப் பார்த்தால் பள்ளிவாசல் என்பது வெறும் வழிபாட்டுத் தலமாகவோ, ஓய்வெடுக்கும் இடமாகவோ மட்டும் இருக்கவில்லை.

அறிவுக் கலைகளைக் கற்றுக் கொடுக்கக் கூடிய கேந்திரமாகவும், பொது மக்களின் பிரச்சனைகள் அலசி ஆராயப்படும் இடமாகவும், அந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் சொல்லும் நீதிமன்றமாகவும், இறைச்சட்டங்களுக்கு ஏற்ப எப்படி வாழ்வது என்று மக்களுக்கு பயிற்சி அளிக்கும் ஆன்மீகக் கூடமாகவும் விளங்கியது.

நமக்கு ஏதேனும் சிக்கல்கள் துன்பங்கள் ஏற்பட்டால் உடனே உறவினர்களிடமும், நெருங்கிய நண்பர்களிடமும் ஓடிச் சென்று ஒருபாட்டம் அழுது தீர்த்து விடுவோம்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்குத் தொல்லைகள் துன்பங்கள் ஏற்பட்டபோதெல்லாம், பள்ளிக்குச் சென்று படைத்தவனைத் தொழுது உதவி கேட்பார்கள். இது இறைவன் மீது அண்ணலார் கொண்டிருந்த அழுத்தமான நம்பிக்கையைக் குறிப்பதாக இருந்தாலும் கூட அவர்களின் நடைமுறை வாழ்வுக்கும், இறையில்லத்துக்கும் இருந்த நெருக்கமான பிணைப்பையும் புலப்படுத்துகிறது அல்லவா?

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் காலத்திலும் அவர்களுக்குப்பின் வந்த கலீஃபாக்கள் காலத்திலும் பள்ளிவாசல்கள் சமூக வாழ்க்கையை நடத்திச் செல்லும் தலைமைக் கேந்திரமாக விளங்கின. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் வாழ்வின் அனைத்துத் துறைகளும் அங்கேதான் வடிவமைக்கப்பட்டன.

இன்று இறையில்லங்களுக்கும் நமக்கும் உள்ள தொடர்பை எண்ணிப் பார்க்கும்போது வருந்தாமல் இருக்க முடியாது.

அரபிக் கல்லூரிப் பேராசிரியர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த போது நகைச்சுவையாக ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட்டார். அது சிரிப்புக்குரிய நிகழ்ச்சியாக மட்டுமல்ல, சிந்தனைக்குரியதாகவும் விளங்கியது.

வெளியூர் பயணி ஒருவர் பள்ளிவாசலுக்குத் தொழ வந்தாராம். தொழுது முடித்ததும் தாம் கொண்டு வந்த பையை மறதியாக வைத்துவிட்டுப் போய்விட்டார். சிறிதுநேரம் கழித்து நினைவு வந்தவராக வேகமாகப் பள்ளிக்குத் திரும்பி வந்து பார்த்தார். பையைக் காணவில்லை. பக்கத்தில்தான் முத்தவல்லியின் (பள்ளிவாசல் தலைமை நிர்வாகியின்) வீடு. அவருடைய வீட்டிற்குச் சென்று நிலைமையை விளக்கி பையைப் பார்த்தீர்களா? என்று விசாரித்தார் அந்தப் பயணி.

முத்தவல்லிக்கு வந்ததே கோபம் …! பயணிக்கு பதில் எதுவும் சொல்லாமல் உள்ளே இருந்த மனைவியை அழைத்தார்.

“அடியே ! நான் எத்தனை வருஷமா இந்த பள்ளிக்கு முத்தவல்லியா இருக்கேன்?” “பத்துப் பதினைஞ்சு வருஷமா இருக்கீங்க. அதுக்கென்ன இப்போ…?” “இந்தப் பத்துப் பதினைஞ்சு வருஷத்தில் ஒரு முறையாவது நான் பள்ளிவாசலுக்குப் போய் நீ பார்த்திருக்கிறாயா?”

“அந்தப் பாக்கியம் தான் எனக்குக் கிடைக்கலியே !”

இப்பொழுது முத்தவல்லி பயணியின் பக்கம் திரும்பி ஒரு பார்வை பார்த்தார். அர்த்தத்தைப் புரிந்து கொண்ட பயணி அமைதியாகத் திரும்பி விட்டாராம்.

இந்த நிகழ்ச்சி நகைச்சுவையை மட்டுமல்ல, நடைமுறையையும் எடுத்துக்காட்டுகிறதல்லவா?

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்.

“பள்ளிவாசலைக் கூட்டிப் பெருக்குவது, தூய்மையாக வைத்திருப்பது, மஸ்ஜிதில் உள்ள குப்பைக் குளங்களை வெளியேற்றுவது, பள்ளிவாசலில் நறுமணம் கமழச் செய்வது, குறிப்பாக வெள்ளிக்கிழமையன்று பள்ளிவாசலை நறுமணத்துடன் விளங்கச் செய்து ஆகிய செயல்கள் அனைத்தும் சொர்க்கத்துக்கு இட்டுச் செல்லும் வழிகள் ஆகும்.” (ஆதாரம்: இப்னு மாஜா)

பள்ளிவாசலுக்குள் நுழையும் போது பின்வருமாறு பிரார்த்திக்குமாறு அண்ணல் நபிகளார் கற்றுத் தந்துள்ளார்கள்:

“இறைவா ! எனக்காக நீ உன் கருணையின் வாசலைத் திறந்து வைப்பாயாக.” முஸ்லிம்களுக்கும், பள்ளிவாசலுக்கும் இடையே இறுக்கமான பிணைப்பு இருந்த போது, தனிமனித வாழ்க்கையிலும் அமைதி நிலவியது. சமுதாய வாழ்வும் சீராக இயங்கியது. தொட்ட துறைகளில் எல்லாம் முஸ்லிம்கள் முன்னேறினார்கள்.

இறைநம்பிக்கையின் – ஈமானின் சின்னமான பள்ளிவாசலை மையமாகக் கொண்டு சமூக வாழ்க்கை இயங்கிய போது, அனைத்துப் பிரச்சனைகளுக்கும் உடனுக்குடன் தீர்வுகள் கிடைத்தன. கூட்டு முறையிலான (ஜமாஅத்) வாழ்க்கைக்குப் பள்ளிவாசலே உயிர்நாடியாக விளங்கியதால், தடைகளைத் தகர்த்தெறிந்து விட்டு மக்களால் முன்னேற முடிந்தது. ஆனால் காலப்போக்கில் முஸ்லிம்களின் சமூக வாழ்க்கைக்கும், பள்ளிவாசலுக்கும் தொடர்பே இல்லை என்ற நிலை உருவாகியது. இறைவனின் வழிகாட்டுதலை விட்டு விட்டு யார் யாரிடமோ, எங்கெங்கோ சென்று தீர்வுகளைத் தேடினார்கள். ஆன்மீக ஆட்சி பீடமாக விளங்கிய இறையில்லங்களை இவர்கள் அநாதைகள் ஆக்கிவிட்டார்கள்.

ஆகவே பள்ளிவாசல் கட்டுவது ஆடம்பரத்திற்கோ, பகட்டுக்காகவோ, ஊர்ப் பெருமையைப் பறைசாற்றுவதற்கோ அல்ல. ஏக இறைவனை மட்டுமே வணங்குவதற்கும், அவனுடைய வழிகாட்டுதலுக்கேற்ப வாழ்வை அமைத்துக் கொள்வதற்கும் ஆன்மீகப் பயிற்சி அளிக்கும் புனித இல்லங்கள்தாம் பள்ளிவாசல்கள்.

இஸ்லாம் வலியுறுத்தும் முதன்மையான பண்பாடுகளில் ஒன்று பள்ளிவாசலுடன் நம் அன்றாட வாழ்வு இரண்டறக் கலந்திருக்க வேண்டும் என்பதுதான். இந்த அழகிய பண்பாட்டை நாம் பின்பற்றி நடந்தால் நம் வாழ்வில் அன்பு தழைக்கும். ஆன்மீகம் செழிக்கும்.

 

( நர்கிஸ் – ஆகஸ்ட் 2015 )

News

Read Previous

பூரண சுதந்திரம் யாருக்கு ?

Read Next

கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *