புத்தாண்டு வாழ்த்துக்கள்

Vinkmag ad
புத்தாண்டு வாழ்த்துக்கள்

பயங்களைப் போக்கியே ஜெயங்களை நல்கிய

ஜெய வருடம் இன்றோடு முடிகின்றது

உன்னதமாகவே உத்வேகம் காணவே

மன்மத வருடம் நாளை விடிகின்றது .

போற்றி வரவேற்போம் புன்னகையோடு
ஏற்றம் பெறவே எல்லாத் துறைகளிலும்

நேற்றைய துன்பங்கள் காற்றோடு போகட்டும்

வேற்றுமைகள் மறைந்து வெற்றிகள் குவியட்டும்


சித்திரை வந்தால் சிறார்களுக்கு விடுமுறை

சித்திரைத் திங்கள் ஆலயங்களில் திருவிழா

சித்திரைதன்னில் பொருட்காட்சிகள் வரும்

சித்திரை முதல் நாள் விஷுக்கனி காண்பர்

சித்திரை வந்தால் இத்தரை சுடுமே

சிந்திடும் வியர்வையால் நித்திரை கெடுமே .

சித்திரைக் கோடையில் சென்று மக்கள்
கடற்கரை தன்னில் காற்று வாங்குவர்

சித்திரை விடுமுறை விருந்தினர் வருகை

சித்திரை முடிந்தால் வைகாசி வரும்

அத்தனை பள்ளிகளும் ‘வை காசு’ என்பர் .

சித்திரவதை தான் சிறு வருவாயினர்க்கு .

பங்குனி முடிந்து சித்திரை வந்தால்

மங்கையர் கழுத்தில் மாங்கல்யம் ஏறும்

மங்கள  வாழ்வு துவங்கிடும் மாதம்

பொங்கிடும் மகிழ்ச்சி புது வாழ்வினிலே

சித்திரை மகளே , சித்திரை மகளே

முத்தமிழ் போற்றும் முத்திரை மகளே

நித்திலம் போற்றும் நிறை பௌர்ணமியில்

அத்தனை சுகமும் அள்ளித்தருவாய் .

மன்மத வருடம் மனங்கவர் வருடம் .

நன்மதி கொண்டோர் நலமெலாம் பெறுவார் .

வெகு மதி கொண்டோர்  வெகுமதி பெறுவார் .

துன்மதி கொண்டோர் துயரமடைவர்

 
கானகம் வளர்த்து கார்மேகம் நிறைந்து
வான் மழை பொழிந்து வளம் பெருகட்டும்
கொலையும் கொள்ளையும் கூண்டோடு ஒழியட்டும்
கோன்முறை அரசால் குறை தீரட்டும்

விவசாயிகளுக்கு விளைச்சல் பெருகட்டும்
முதலாளிகளுக்கு லாபம் பெருகட்டும்
உழைப்பாளிகளுக்கு ஊதியம் உயரட்டும்
பாட்டாளிகளுக்கு பட்ட துன்பம் மறையட்டும்

 
தீவிர வாதம் தீக்கிரையாகட்டும்
மத வாதம் மண்ணில் புதையட்டும்
நாத்திகர்க்கெல்லாம் நன்மதி வரட்டும்
ஆத்திகர்க் கெல்லாம் ஆண்டவன் அருளட்டும் .

வாழிய செந்தமிழ் , வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித்திரு நாடு .
வாழ்க தரணிவாழ்  மாந்தரெல்லாம்
வாழ்க , வாழ்க தமிழ்ப் புத்தாண்டு .

சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்
13.04.2015

News

Read Previous

சாவிகள்

Read Next

புத்தாண்டு வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *