பாலைவனத் தொழிலாளியின் பா(ட்)டு

Vinkmag ad

பாலைவனத் தொழிலாளியின் பா(ட்)டு

 

பாவையை விட்டு வந்து

….பாலையின் சூட்டில் நொந்து

தேவையைக் கருத்திற் கொண்டு

…தேடினோம் செல்வம் இன்று

யாவையும் மறக்கும் நெஞ்சம்

..யாழிசை மழலை கொஞ்சும்

பூவையும் மிஞ்சும் பிள்ளை

..பிரிவினைத் தாங்க வில்லை!

விடையினைக் கொடுத்த நேரம்

…விலகியே நிற்கும் தூரம்

தடைகளாய்ப் போன தூக்கம்

..தவிப்பினில் நெஞ்சில் ஏக்கம்

மடையெனத் திறக்கும் கண்ணீர்

..மனத்தினில் கொதிக்கும் செந்நீர்

உடைந்திடும் இளமைக் கட்டும்

..உடையினில் வேடம் மட்டும்!

வாயினைக் கட்டிப் பூட்டி

…வயிற்றினைப் பசியால் வாட்டி

காயமும் தாங்கிக் கொண்டு

…கயிற்றினில் தொங்கிக் கொண்டு

தாயகத் தேவை ஆசை

..தீர்ப்பது எங்கள் காசே

மாயமாம் இந்த மோகம்

…மடியுமோ இந்த வேகம்?

— அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி

News

Read Previous

எதிரில் இருப்பவர்கள் எதிரிகளா?

Read Next

புகைப்பட அனுபவங்கள்

Leave a Reply

Your email address will not be published.