நெடுஞ்சாலைப் பயணம்
நெடுஞ்சாலைப் பயணம்
கடைசி வரிசைக்கு வாழ்க்கைப்பட்டு விட்டவர்களை
முறத்தில் வைத்துப் புடைப்பது மாதிரி
குலுக்கிப் போட்டு
எடுத்துப் போகும் வேகப் பேருந்து
டயர் சீட்காரர்
அவ்வப்பொழுது போய்
முன்னிருக்கையில் முட்டி மோதி
தேய்த்துக் கொள்வார் வலிக்கும் நெற்றியை
உறக்கம் கலையாமலே
சன்னலோரப் பயணி
வண்டிக்கு வெளியே
சிதறி விழப் பார்க்கும்
உடம்பின் பாகங்களை மீட்டெடுத்துக் கொள்வார்
டாம் அண்ட் ஜெர்ரியில் வரும் பூனை மாதிரி
ஓடிக் கொண்டிருந்த திரைப்படம்
நிறுத்தப்பட்ட நேரம் கூடத் தெரியாத
பாட்டியம்மா
புருவத்தை நெரித்து
யாரையோ தேடிய பார்வையிலேயே
அவரறியாமல் தடுக்கி வீழ்வார்
அடுத்த கட்ட தூக்கத்திற்குள்
நித்திரை அருள் வந்து ஆடும் சாமியாடிகள்
வரிசைகள் தோறும்
கொலுவாய் வேறு உலகத்தில் இருக்க
முன்புற கண்ணாடிக்கு வெளியே
மையிருட்டில் மழைத் தூறல் மாதிரி
சிதறும் வாகன விளக்குகளின்
வெளிச்ச இழையோட்டத்தில் விரியும்
நம்பிக்கையற்ற நீண்ட நெடிய வெளியில்
யாரையோ துரத்திய படியும்
யாரிடமிருந்தோ தப்பியவாறும்
இரைச்சலோடு விரையும் பேருந்தில்
ஒட்டுநருக்குப் பின் இருக்கையில்
உறக்கம் வராத இந்தப் பேய் இரவில்
உயிரைக் கையில் பிடித்தபடி நான்.
– எஸ் வி வேணுகோபாலன்
நன்றி: ஆனந்த விகடன் (சொல்வனம்)
Tags: நெடுஞ்சாலைப் பயணம்