நினைவில் நிற்கும் தமிழகமே!

Vinkmag ad
“நினைவில் நிற்கும் தமிழகமே!”
 
வங்கக் கடலில் முகம் பார்த்து 
சிங்காரிக்கும் தமிழகமே! உன் 
கூந்தல் ஆந்திர, கன்னடத்தில் 
கேரள பூச்சரம் தொங்குதடி!
 
பழவேற்காடு ஏரி எனும் 
பதக்கம் பதிந்த நெற்றியிலே 
திலகம் சென்னை நகராகும்! 
திரண்ட புருவம் விழுப்புரமே!
 
கண்ணின் கருவிழி கடலூரில் 
கன்னத்து மச்சம் திருச்சியிலே! 
காதெனும் நீலகிரியினிலே 
குழையாய் தொங்கும் கோவையடி!
 
ஊருக்கெல்லாம் உணவளிக்கும் 
காவிரிப்படுகை நாசியிலே 
நாகை, தஞ்சை, திருவாரூர் 
நன்னிலமாகும் களஞ்சியமாம்!
 
உதட்டில் கவ்விய “ஊக்காக” 
நீண்டது பாம்பன் பாலமடி! 
இந்தியப் பெருங்கடல் அலைகளுமே 
குமரித் தாடையை கொஞ்சுதடி!
 
உலகில் உள்ள ஊர்களெல்லாம் 
சுற்றிப்பார்த்து மகிழ்ந்தாலும் 
நிழற்படமாக உந்தன் முகம் மட்டும் 
நினைவில் நிற்கும் தமிழகமே!
நினைவில் நிற்கும் தமிழகமே!
நினைவில் நிற்கும் தமிழகமே!
 
— முத்து ராஜா 

News

Read Previous

எது வளர்ச்சி?

Read Next

வாழ்க்கையின் பயனுள்ள 33 குறிப்புகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *