நாலாவதும் பொண்ணு.எருக்கம்பால் ஊத்திட்டோம்

Vinkmag ad
“நாலாவதும் பொண்ணு.எருக்கம்பால் ஊத்திட்டோம்.”
================================================================ருத்ரா
ஊடகத்துக்கு பேட்டி அளித்த‌
பெண்ணே!
நீ என்றாவது ஒரு பெண் என்று
நினைத்திருக்கிறாயா?
பூச்சூடி பொட்டிட்டு
வாக்கப்பட்டு போறதெல்லாம்
உன் கருவறை என்னும்
கோயிலுக்குள்
உன் பெண்மைக்கே
ஒரு கல்லறை
கட்டுதற்கோ?
பெண்ணாய் பிறந்தவள்
படுகின்ற வதைகள் எல்லாம்
சாதி மதங்கள் எனும்
சைத்தான்கள் தந்தது தானே.
கஞ்சிக்கும் வழியின்றி
போகின்றோமே என்று
கண் முளைக்கும் முன்னேயே
கண்மணியின் கண்மூடி மண்மூடிப்
போனாயே.
ஆண் என்று
கொம்பு மட்டுமே உள்ள மிருகங்களா
உன்னை சின்னாபின்னம் செய்வது?
பெண்ணையும்
இந்த மண்ணையும் மாண்போடு
காக்கின்ற ஆண் தானே ஆண்.
மற்றவனுக்கு
அந்த முண்டாசு எதற்கு?
நாட்டாமை செய்கின்றேன் என்று
நாட்டு ஆமை போல்
மல்லாக்க கிடப்பவனா
நாட்டைக்காப்பான்?
எளியவனைச்சுரண்டும்
வலியவர்கள் மீது அல்லவா
இவர்கள்
புறநானூற்று வீரம் பொங்கவேண்டும்?
இவர்கள் கூரிய கொம்புகளும்
பாயவேண்டும்.
போகட்டும்
“பொட்டச்சிகள்”
என்று திமிர்வாதம் பேசும்
இந்த ஆண்குஞ்சுகளை
அடை காக்கும்
தாய் இனமே!
ஏன் இந்த ஓரவஞ்சனை
அந்தப்பொட்டைப்பயல்களுக்கும்
பாலூட்ட‌
அரளிவிதை அரைத்து ஒரு
அமுதப்பால்
அந்த சிரட்டையில் எடுத்து வை!
======================================================

 

News

Read Previous

காத்திருக்கிறேன்…

Read Next

அண்ணாகண்ணன் யோசனைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *