நம்பிக்கையொளியில் ……

Vinkmag ad

நான்கு சுவருக்குள் நாட்களை நகர்த்திடும்
நாட்களிவையெனும் ஓர்நிலை வந்தது!
தேங்கிவிடாது தேர்போல் ஞாலம்
திக்கு முக்காடித் தேர்க்கால் நகர்த்தி
ஊர்ந்திடும் காட்சி எம்முன் விரிந்தது!
உலகமோர் குடும்பம் ஓரூர் இதுவெனும்
ஆன்றோர் வாக்கின் அகப்பொருள் துலங்கிற்று!
ஊன்தனுட் புகுந்து உள்ளுறுப்பரிந்து
தீங்கினை ஆற்றும் தீயவல் கிருமியின்
பாங்கினையறிந்து பாதிப்பையகற்றிட
ஆய்ந்திடும் அறிவிய லாளர்கள் பற்பலர்!
வான்வழி வருமோ? வளி வழி தாவுமோ?
நீர்த்துளி தன்னில் நின்றது தொடுமோ?
மானிடம் இன்று மயக்கத்தில் உள்ளது!

ஆயினும் உளத்தின் ஆழத்தில் ஒளிரும்
அசைக்கமுடியா ஆன்மீக நம்பிக்கைப்
பாயிரமொன்று பார்வையில் விரிந்தது!
மாயையில் உலகை மாய்த்திடப் போரில்
மரணங்கள் குவிக்கும் மாந்தரின் அழிவுப்
பேயினை விரட்டும் பேரறிவொன்று
பூத்திடும் காலம் வாய்த்திடலாமோ?
ஆயுதபலத்தினை அகிலத்தில் நிறுவிட
அகந்தையில் உலகினை அழித்திடத் துடிக்கும்
அசுரத்தனமிக்க கொரோனாக்கள் பிடியினில்
ஆயிரமாயிரம் அனுதினம் மடிவதை 

யார்தான் இதுவரை தடுத்திடத் துணிந்தனர்?
தாய்நிலமடியினிற் தாகத்திற் பசியினில்
நோயிலும் பிணியிலும் அணுகுண்டுப் புகையிலும்
தீயிலும் தடுப்பிலும் சிறையிலும் முகாமிலும்
ஆழ்கடல் மடியிலும் மலையிலும் வனத்திலும்
தாயரும் சேய்களும் தந்தையர் தனயரும்
நாளும் பொழுதுமாய்ச் சாவினைத் தழுவிடும்
கோரநிலைக்கான கொரோனாக்கள் எத்தனை?

தனிமைப் படுத்தல்கள் இன்றுமட்டுமா?
த்த்தளிப்புகள் இன்றுமட்டுமா?
மனிதம் அழுவது இன்று மட்டுமா?

இனிமேலாவது இன்னுயிர் கொல்லும்
இழிவு நிலையது எமைவிட்டு நீங்குமா?

பொல்லாத் தலைமைகள்
புரிந்திடும் கொடுமைகள்
இல்லா நிலைமை எம்முன் தோன்றுமா?
கல்லார் மூடக் கொள்கைகள் வழங்கும் 

கருணைகடந்த பிரிவுகள் பெருக்கும்
வல்லார் வழியில் வையம் அழிதல்
இல்லா நிலைமை இனியேனும் பிறக்குமா?
எல்லைகடந்த அன்பினால் ஈங்கு
இதயத் தூய்மையால் உலகம் இணையுமா?
வல்ல இயற்கையின் வளங்களை மதித்து
வாழும் சந்ததி நாளை உதிக்குமா?
நல்லவை நடக்கும் நம்பிக்கை யொளியை
நயந்திடும் வல்ல சக்தியை வேண்டுவோம்!

அன்புடன்
புலவர் சிவநாதன்

News

Read Previous

எண்ண அலைகள் !

Read Next

கலைஞர் வாழ்க!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *