நபி பெருமான் வருகை

Vinkmag ad

       நபி பெருமான் வருகை

 

( ஈரோடு .கே.எம். தாஜ் )

 

கண்ணான கண்மணியே கருணைமிகு மாநபியே

காத்தருளும் இறையோனின் கனிவுமிகு அருட்கொடையே

விண்ணோர்க் கெலாம்முதலாய் பேரொளியாய் வந்துதித்து

விளக்காக சுடர்விட்டு இருள்நீக்க வந்தீரே !

 

மண்ணோரின் மாந்தர்க்கு உயர்வாழ்க்கை வழிகாட்ட

மடமையெலாம் ஒழித்து மனிதர்களாய் உயிர்வாழ

மாண்போடு வாழும்கலை கற்பித்து தான்நடந்து

மட்டில்லாப்  பேரன்பால் வாழ்விக்க வந்தீரே !

(கண்ணான கண்மணியே)

 

காரிருளில் நடுக்காட்டில் ஏற்றிவைத்த தீபத்தில்

காந்தம்போல ஈர்த்துவரும் விட்டில் பூச்சிகளாய்

போராடித் தம் இடுப்புப் பட்டையை பிடித்திழுத்தும்

போதாமல் மீறிவந்து தீயில்வெந்து விழுகிறாரே !

 

பேரருளால் நீர்வந்த பேற்றினை என்சொல்வேன்

பேதமையால் நரகத் தீவிழுந்து அழிவதுஏன்

பாரினில் உம்மத்தில் ஒருவருமே தவறிடாமல்

புகவேண்டும் சுவனமென்ற பேராசை கொண்டீரே !

(கண்ணான கண்மணியே)

 

இறைவனின் படைப்பினிலே அனைவருமே சமம்தானே

இணைவைப்பார் இறைமறுப்பார் யாவருமே இதையுணர்ந்து

மறைவழங்கி நபிவழங்கி மனமிறங்கி உதவியதை

மனமுவந்து ஏற்றுக்கொண்டு மாநபிநற் சொல்நடந்தே !

 

மறைந்துவிடும் இல்வாழ்வும் மறுமைநிலை நிறைவாழ்வும்

முயன்றுநாம் சிந்தித்து இருவாழ்வும் சிறந்தோங்க

குறையிலா குணக்குன்றாம் கோமான் நபிபெருமான்

கூறும்படி வாழ்ந்திருந்து ஈருலக வெற்றிபெறுவோம் !

(கண்ணான கண்மணியே)

-ஈரோடு ஈ.கே.எம். தாஜ்

 

நன்றி : மணிச்சுடர் நாளிதழ் 16/17 ஜனவரி 2013

 

 

 

 

News

Read Previous

இப்னு பதூதா

Read Next

கல்வியின் நம் பின்தங்கிய நிலையும், மீட்டெடுக்கும் வழிமுறைகளும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *