தோரணம்
தோரணம்
============================== ===================ருத்ரா
ஆண்டு தோறும் கட்டுகிற
தோரணம் தான்…
ஆனாலும் இந்த
“ரணத்துக்கு” யார் கட்டு போடுவது?
அறுபது ஆண்டுகளுக்கும் மேலாய்
புரையோடிப் போனது.
பணப்பொருளாதாரத்தின்
நம் நாபிக்கொடிகள் எல்லாம்
ஏதோ ஒரு கருப்புதேசத்தில் அல்லவா
நடப்பட்டு இருக்கிறது என்கிறார்கள்.
லட்சம் கோடிகள்..கோடி கோடிகள்..
காகித திட்டங்களுக்கு
நூறு ஆண்டு ஆனாலும்
கருப்பிடிக்க இயலாத
சுதந்திரமும் ஜனநாயகமுமே நமக்கு.
கணிப்பொறிகள்
கரன்சிகளின் கண்ணிவெடிகள்
புதைக்கப்பட்டனவாய்
ஓட்டுகளை வெடித்து சிதறுகின்றன.
பொய் வெற்றிக்கு
பத்தாயிரம் வாலா வெடித்து முடித்த
பேப்பர் சிதிலங்களில்
தெருவெல்லாம்
சுதந்திரத்தின் நம் பட்டயங்கள்
“வறுமையை விரட்டுவோம்” முழக்கம் கூட
கார்ப்பரேட்டுகளின்
“ஃப்லெக்ஸ் போர்டுகளில்” தான்.
அச்சமில்லை அச்சமில்லை
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பதே இல்லை தான்.
ஆனாலும் ஒரு அச்சம் இங்குண்டு.
நிலம் கையகப்படுத்திய பிறகு
இந்தியா
என்று உச்சரிப்பதற்கும்
பேட்டண்ட்
அந்நிய முதலீட்டாளரிடமோ
என்ற அச்சமே அது!
அந்த மூவர்ணம் வெறும்
அக்ரிக் எமல்ஷன் அல்ல.
இன்னும்
நமக்குள் கசிகிற நம்பிக்கையே
அந்த வெளிச்சம்.
அந்த நம்பிக்கையே வெல்லட்டும்.
============================== ==================
Tags: தோரணம்