தேசத்தின் தேவை
#தேசத்தின் தேவை…
*************
சமகால அரசியல் அறியாச் சமூகம்
தன்னைத் தானே
அடிமையென அறிவித்துக் கொள்ளும்…
ஒதுங்கியிருக்கச் சொல்லும்
முதியவர்களே …!!
நீங்கள் கொஞ்சம் ஒதுங்கியிருங்கள்…
உங்களால் கற்றுக்கொடுக்கப்படாத
உயர்வான அரசியலால் -இன்று
எம் இளைஞன்
திசைமாறித் திரிகின்றான்…
உணர்வுத்தீக்குள் தன் அறிவுச் சுடரை தொலைத்து விட்டான்…
இளைஞனே…..!
பழிவாங்கப் படித்துத் தரும் -எந்த தலைமையாலும்,
பண்பட்ட அரசியலைக் கற்றுத் தரமுடியாது.
அரசியல் ஞானம்,
காதல் போல் காமம் போல்
உடலாடும் சுரப்பிகளால் பிறப்பதில்லை..
கற்று,அறிந்து, அறிந்ததை ஆய்ந்து
பாரின் அசைவுகள் நோக்கி
பார்வைகள் கூராக்கி பரந்த பண்புகள்
கொண்டு கூட்டத்தில் முதலாகி
முத்திரைப் பதித்தவனே தலைவன்..
பண்முகம் பரந்துபட்ட பாரதத்தின்
இறையாண்மை பாதுகாக்கப்பட
எப்போதும் தேவை..
அரசியல் அறிவுச் செறிந்த ஆளுமைகள்…
இன்று வரை,இவர்களை உருவாக்காத
கல்விக்கூடங்கள்,
மதரஸாக்கள்,
சமூகங்கள்,
தலைவர்கள்,
தங்களையறியாமல் தாங்களே
அரசியல் சாக்கடைகள் தோண்டி
அங்கிருந்தே தகுதியற்ற தலைமைகளை
அரசுக் கட்டிலில் அமரச்செய்யும்
ஆபத்தான பாவங்களில்
பங்காற்றுகின்றனர்….
அரசியல் அறிவென்பதை,
கல்விக்கூடங்களிலிருந்து
கற்றுக் கொள்ளத் தொடங்காதவரை,
அது நமக்கான சாபங்களே…!!!!
வகுப்பறை வாய்ந்த மாணவன்
அல்லது
வாசிப்பு வாசகம் கொண்ட வாசகன்
இவ்விரண்டில் ஒருவரான
தலைமையால் மட்டுமே
சாபங்கள் மாறக்கூடும்…..
காத்திருக்கின்றது …
இந்திய தேசத்தின் அரசியல்
இருக்கைகள்…
************
#தேசத்தின் தேவை….
#முஸ்தாக்கின் கவிதைகள்