தமிழ்
பொன்னின் குவையெனக்கு வேண்டியதில்லை – என்னைப்
போற்றும் புகழெனக்கு வேண்டியதில்லை
மன்னன் முடியெனக்கு வேண்டியதில்லை – அந்த
மாரன் அழகெனக்கு வேண்டியதில்லை.
கன்னித் தமிழெனக்கு வேணுமேயடா – உயிர்க்
கம்பன் கவியெனக்கு வேணுமேயடா
தின்னத் தமிழெனக்கு வேணுமேயடா – தின்று
செத்துக் கிடக்கத் தமிழ் வேணுமேயடா.
உண்ண உணவெனக்கு வேண்டியதில்லை – ஒரு
உற்றார் உறவினரும் வேண்டியதில்லை
மண்ணில் ஒரு பிடியும் வேண்டியதில்லை – இள
மாதர் இதழமுதும் வேண்டியதில்லை.
பாட்டில் ஒருவரியைத் தின்றுகளிப்பேன் – உயிர்
பாயும் இடங்களிலே தன்னை மறப்பேன்
காட்டில் இலக்குவனைக் கண்டு மகிழ்வேன் – அங்குக்
காயும் கிழங்குகளும் தின்று மகிழ்வேன்.
மாட மிதிலைநகர் வீதிவருவேன் – இள
மாதர் குறுநகையில் காதலுறுவேன்
பாடி யவர் அணைக்கக் கூடி மகிழ்வேன் – இளம்
பச்சைக் கிளிகளுடன் பேசிமகிழ்வேன்.
கங்கை நதிக்கரையில் மூழ்கியெழுவேன் – பின்பு
காணும் மதுரைநகர்க் கோடி வருவேன்
சங்கப் புலவர்களைக் கண்டு மகிழ்வேன் – அவர்
தம்மைத் தலைவணங்கி மீண்டு வருவேன்.
செம்பொற் சிலம்புடைத்த செய்தியறிந்து – அங்குச்
சென்று கசிந்தமுது நொந்து விழுவேன்
அம்பொன் உலகமிர்து கண்டனேயடா – என்ன
ஆனந்தம் ஆனந்தம் கண்டனேயடா.
கால்கள் குதித்துநட மாடுதேயடா – கவிக்
கள்ளைக் குடித்தவெறி ஏறுதேயடா
நூல்கள் கனித்தமிழில் அள்ளிடவேண்டும் – அதை
நோக்கித் தமிழ்ப் பசியும் ஆறிடவேண்டும்.
தேவர்க் கரசுநிலை வேண்டியதில்லை – அவர்
தின்னும் சுவையமுது வேண்டியதில்லை
சாவில் தமிழ்படித்துச் சாகவேண்டும் – என்றன்
சாம்பல் தமிழ்மணந்து வேகவேண்டும்.
பாடையிலே படுத்தூரைச் சுற்றும்போதும்
பைந்தமிழில் அழும் ஓசை கேட்கவேண்டும்
ஓடையிலே என்சாம்பல் ஓடும்போதும்
ஒண்தமிழே சலசலத்து ஓடவேண்டும்
ஈழக் கவிஞர் மாவிட்டபுரம் க. சச்சிதானந்தன்.