தமிழர்கள் வாழ்க!
தமிழர்கள் வாழ்க!
தமிழைப் பற்றிப் பேசாது
தமிழரைப் பற்றிப் பேசாது
இருக்கும் தமிழா உன்னோடு
இருந்தும் நாடும் பயனேது?..
உன்னைப் பற்றி உணராது
உலகைப் பற்றித் தெளியாது
கண்ணை மூடிக் கனவோடு
காலம் போனால் சிறப்பேது?..
வந்ததற்கெல்லாம் இடம் தந்து
வருவோர்க்கெல்லாம் புகழ் தந்து
உன்னை நீயே உயர்த்தாது
உயரம் என்றால் சரியாஅது?
பிழைப்புகள் தேடி வரலாம் பலரும்
பிள்ளைகள் எனவும் அழலாம் சிலரும்
வம்படிப் போக்காய் வரவாய் களரும்
வாய்ப்புகள் கிடைத்தால் அடிக்கவா உனையும்?..
அவரை நம்பியா வைப்பாய் உலையும்?!
அவரிடம் ஆட்சியும் அளிப்பாய் தலையும்?
எடுப்பார்க்கெல்லாம் அலையும் பிள்ளையோ?
இயலாமைக்கு நீ அடிமைத் தளையோ?..
விடுப்பாய் அதுபோல் எந்த செயலையும்
விதியென நோதல் அழுகை நிலையையும்
பிடிப்பாய் இனிமேல் தமிழென்னும் கலையையும்
பிறப்பால் தமிழர் எனும் நல் நடையையும்
கெடுப்பார் கைவிட்டு எழுதிடு கதையையும்
எங்கள் இனமே ஆளட்டும் முடியையும்
சொல்லி அடித்தமிழ் ஓசைகள் முழங்க
சோர்வை விட்டெழு பழமைகள் விளங்க!
அருமைத் தமிழர் தலைமைகள் துலங்க
அச்சம் அது நம் அடிதொட்டு தொழுக
புதிது புதிதாய் போற்றட்டும் உலகே
புகழால் தமிழர் வாழட்டும் இனிதே!
காலம் தமிழருக்கு தடைவிட்டு விலக
கன்னித் தமிழரின் பணி வெற்றி பெறுக
தூற்றிய அவலங்கள் தோள்விட்டு இறங்க
துணிவென்னும் நிலையினில் தமிழர்கள் வாழ்க!
பாவலர்
மு. இராமச்சந்திரன் தலைவர் தமிழ்த் தன்னுரிமை இயக்கம்.